Posts Tagged ‘Story’

எப்பொழுதும் மழைக்காலம் …

சில கதைகளை ஆரம்பிக்கும் உரிமை மட்டுமே எழுதுபவனுக்கு இருக்கிறது. பின் கதை தன் போக்கில் எழுதுபவனையும் , காலத்தையும் நகர்த்திக் கொண்டு போய் விடுகிறது. தனக்கே தனக்காக எழுதும் பொழுது மட்டுமே இது சாத்தியம். இந்தக் கதை எழுதி முடிக்க மூணரை வருடங்கள் அதிகமா என்றெல்லாம் தெரியவில்லை. இந்த கதை என் மனதிற்கு நெருக்கமானது என்பது மட்டும் உண்மை. இந்த பயணம் எனக்குப் பிடித்திருக்கிறது.

மற்றபடி இந்த கதைக்கான கரு எப்படித் தோன்றியது , இதை எப்படிப் படிக்க வேண்டும் , எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோனார் தெளிவுரை போட்டு திட்டு வாங்க விருப்பம் இல்லை :-)

படித்து விட்டு சொல்லுங்கள் ….

 

பிரிதல்

ஊடல்

கூடல்

இரங்கல்

இருத்தல்    

 

—————————————————————————-

Tags: , , ,

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.

நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன்.  ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.

அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன.  அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.

காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது.  பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது.  சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.

அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத்  தயங்காமல் இருந்தாள்.

மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள்,  கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட  தீண்டல்கள்.

காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது.  இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.

அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன். Read the rest of this entry »

Tags: , , , ,

நெய்தல்  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

 

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . சாலைகளை நனைக்கும் முன்பே  பாதியைப் பிடித்து  வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் , தான் நனைந்தது போக மீதியை,  சொட்டுச் சொட்டாக வீட்டிற்குள் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தன அந்தச் சிவந்த ஓடுகள் .  தரை முழுவதும் வழி தேடிப் பரவி , வாயில் காண முடியாமல் , மண்ணைச்  சேர முடியாமல் மேலும் அழுது வீடு முழுவதும் ஈரம் பூக்கச் செய்து கொண்டிருந்தது துயரம் கொண்ட மழை . வயோதிகர்கள் என்பதாலேயோ என்னவோ அவர்கள் இருந்த படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவேயில்லை மழை, மேலிருந்து  கீழாகவோ இல்லை கீழிருந்தும் கீழாகவோ . குளிராலேயோ மெத்தைப் பஞ்சின் கனத்தாலேயோ  மெலிதாகக் கால்கள் ஆடிக்கொண்டிருந்த கட்டிலில் , கழுத்தின் மேற்பகுதி மட்டும் தெரியும் வண்ணம் கம்பளிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள் அவள் .

 

முகத்தின் சுருக்கங்கள் வழி மெல்லப் புகுந்து அவள் சருமத்தை மேலும் உலர வைத்துக் கொண்டிருந்தது குளிர் . மூடியிருந்த இமைகளின் கீழ் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தன அவள் விழிகள் . சருகு போர்த்தியிருந்த உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன . ஒருமுறை இருமினாள் .

 

                 ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தவன் இருமல் சத்தம் கேட்டு , மீதி ஓவியத்தை தூரிகையிலேயே விட்டு அதை வண்ணங்களில் மூழ்கடித்து விட்டு அவள் அருகில் வந்தமர்ந்தான் . நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் . முன்பை விட அதிகம் சுடுவதாய்ச் சொன்னதவன் உள்ளங்கை . கம்பளிக்குள் தேடி அவள் கைகளை எடுத்து தன்னிரு உள்ளங்கை உள்ளடக்கிய இடைவெளிகள் மொத்தமும் நிரப்பிக் கொண்டான் .

 

மிகவும் பிரயாசைப் பட்டு இதழ்கள் பிரித்து , ” இப்பொழுது கூட ஓவியமா ” என்றாள் .

 

எதுவும் பேசாமல் மௌனமாகப் புன்னகைத்தான் .

 

ஓவியம் காணும் ஆர்வம் கொண்டு படுக்கையிலிருந்து எழ முயன்றவள் , முடியாமல் போகவே பெருமூச்சோடு மீண்டும் படுக்கையில் சரிந்தாள் . அவள் மனம் புரிந்து கொண்டவனாய் ஓடிச் சென்று பாதி வரைந்திருந்த ஓவியத்தை பலகையோடு தூக்க முயன்று முடியாமல் வரைதாளை மட்டும் கிழித்துக் கொண்டு வந்தான் .

 

வண்ணத்துப் பூச்சிகள் வான் முழுவது நிறங்கள் சிந்திக் கொண்டிருக்க ,  உடல் தொட்டிருக்கும் பரவசத்தில் ஆடைகள் நெகிழ்ந்து  காற்றில் பறந்திருக்க , ஒரு கையில் புல்லாங்குழலுடன் மிதந்து கொண்டிருந்தாள் தேவதை ஒருத்தி . ஒரு சிறகு  பாதி மட்டுமே முளைத்திருந்தது . வாசமில்லா பல நீல நிறப் பூக்கள் ஏங்கிய படியிருந்தன அவள் இன்னொரு கை பார்த்து . தேவதையின் முகம் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவள் இதழ்களைக் கவின் செய்தாள். Read the rest of this entry »

Tags: , ,

குறிஞ்சி – கூடலும் கூடல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . நனைந்திருந்த வீதிகளை ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டே கவிதை எழுதிக் கொண்டிருந்தான் அவன் . மெல்லிய காற்று ஜன்னல் கம்பிகளை புல்லாங்குழல் என நினைத்து ஊத முயன்று கொண்டிருந்தது . முகத்தில் மோதிய குளிர் காற்றை அனுபவித்து ரசித்தபடி அதைக் காகிதத்தில் வரைந்து கொண்டிருந்தான் . பின்னாலிருந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு சாய்ந்தாள் அவள் . அவன் எதிர்பார்த்திருந்த தருணம் , நிகழ்ந்திருந்தது எதிர் பாராத தருணத்தில் . சாரலில் இருந்து தப்பித்திருந்த காகிதகங்களை நனைத்துக் கொண்டிருந்தாள் தன்னை நனைத்திருந்த மழையைக் கொண்டு, அவனையும் சேர்த்து .

“தீர்ந்ததென் சந்தேகம் ” சொல்லிக் கொண்டே அவளை முன்னிழுத்து தன் மடியில் வீழ்த்தினான் . கிளையில் கட்டப் பட்ட தாயின் சேலையென அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் உடைகள் , அதிலாடும் குழந்தையென அவள் .

தொட்டில் குனிந்து முத்தமிட எத்தனிக்கும் தாயின் கிட்டத்தில் அவன் .

“என்ன கண்டு பிடித்தீர்கள் புதிதாக என்னிடம் இப்பொழுது “

” மழையில் நனையுமா நிலவு என்ற பழைய சந்தேகம் தான் . என்ன செய்யப் போகிறேன் சொட்டச் சொட்ட என் மடியில் பதிலோடு வந்து நிலவு விழுந்து கிடக்கிறதே இப்பொழுது .. “

Read the rest of this entry »

Tags:

மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் மொத்தமாக நனைந்திருந்தன. நகரோடு சேர்ந்து நனைந்திருந்த நதி குளித்து முடித்த பெண் கூந்தல் துவட்டும் சத்ததுடனும் , வாசனையுடனும் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. நதியொட்டியிருந்த கரையும், கரை தொட்டிருந்த மரமும் அவளுடன் நிறையப் பேச விரும்புவதாய் தெரிந்தது. அடிக்கொருமுறை கரைத்திட்டில் மோதி சில நீர்த் துளிகளை அனுப்பி அவளைத் தொட்டுப்பார்த்து வரச் செய்து கொண்டிருந்தது நதி.

மஞ்சள் நிறப் பூக்களையும், கடன் வாங்கியிருந்த மழையையும் ஒரு சேரத் தூவி அர்ச்சித்துக் கொண்டிருந்தது அவள் அழகை வெகுகாலமாய் சாப விமோசனம் தேடி அங்கேயே நின்று கொண்டிருக்கும் மரம்.சில்லென்ற காற்று முடிந்த மட்டும் அவளை முட்டி மோதி குறைந்த பட்சம் அவள் ஆடையையாவது திருடிக் கொண்டு சென்று விட முயன்று கொண்டிருந்தது. அவள் ரணம் மொத்தத்தையும் குரலில் ஏற்றிக் கூவிக் கொண்டிருந்தது தூர தேசம் தாண்டி வந்திருந்த ஏதோ பறவை ஒன்று. அவள் கண்களின் கீழும் மழை பெய்தாயா என ஓவ்வொரு மேகங்களும் மாற்றி மாற்றி மின்னல்களில் சமிக்ஞை பரிமாறிக் கொண்டன.

எந்த அரவமும் ஏற்படுத்தாமல் வந்து நின்றிருந்தான் அவன். பின்னால் இருந்து பார்க்க அந்த மாலை நேர நதி மரங் காற்று பறவையுடன் அவளும் ஓர் ஓவியம் ஆகிவிட்டதைப் போலவே உணர்ந்தான். சிலர் மட்டுமே அழுகையில் கூட அழகாகத் தெரிகிறார்கள் மழை நின்று போன வானம் போல. அவள் கண்ணீரைத் துடைக்கும் முன் அந்த அழகைக் கூட ரசிக்கத் தோன்றியது அவனுக்கு.

அவள் முன்னே செல்ல தைரியம் இல்லாதவனாய் மரத்தின் பின் சாய்ந்து ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டான். பிரபஞ்சம் மொத்தமும் அவள் சுவாசமே நிறைந்திருப்பதாய் தோன்றியது.

ஒரு முறை பக்கவாட்டில் பார்த்த அவள் கண்கள் மீண்டும் கடல் பக்கம் நிலை குத்தியது. அவன் இருப்பை உணர்ந்தது போலவே இருந்தது அவள் தோரணை.

Read the rest of this entry »

Tags:

பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் மொத்தமாக நனைந்திருந்தன. இன்னும் கொஞ்சம் நனைக்க அந்த தேவாலயத்தின் கண்ணாடிப் பரப்பெங்கும் நுழைவாயிலின் உச்சியில் இருந்து வழிந்து கொண்டிருந்த நீர் முயன்று கொண்டிருந்தது.

கால்கள் இல்லாத ஒருவன் அந்த தேவாலயத்தின் மணி அடிக்கும் பொறுப்பில் இருந்தான். அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து நுழைவாயில் தெரியாது. தடுப்புகளின் இடைவெளியில் உள்ளே செல்பவர்களின் ஆடைகளும் , அவர்களின் கைகள் மட்டுமே தெரியும். நாட்கள் முழுக்க எத்தனை கைகளும் , மெழுகுவர்த்திகளும் உள்ளே செல்கின்றன என எண்ணிக் கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கையைக் கொண்டு அவனால் உட்செல்பவர்களின் பிரச்சனையின் வீரியத்தை அளவிட முடிந்திருந்தது. அவன் மனதுக்குத் தோன்றினால் அவர்களது பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென மணி அடிப்பது அவன் வழக்கம்.

தேவாலயத்தின் மணி ஒருமுறை தனது மேலிருந்த நீர்த் துளிகளை சிலிர்த்துக் கொண்டு ஒலித்தது. இப்பொழுது அந்த முடவன் மணி அடித்தது வெள்ளை உடை அணிந்த , ஒற்றை மெழுகுவர்த்தியை இறுகப் பற்றியிருந்தவளின் கைகளுக்காக. கொஞ்சம் இடைவெளி விட்டு ஒற்றை ரோஜாவை அதை விட இறுகப் பிடித்தபடி தொடர்ந்திருந்த கைகள் புதியதாகத் தெரிந்தது.

அந்த ரோஜாவுக்குச் சொந்தக்காரன் அந்தப் பெண்ணிடம் இருந்து நான்கு மேஜைகள் பின்னால் உட்கார்ந்து கொண்டான்.

உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மஞ்சள் வெளிச்சத்தில் மண்டியிட்டுக் கண்கள் மூடியபடி பிராத்தனையில் இருந்தாள் அவள். மிக மிக அழகாக முணுமுணுத்துக் கொண்டிருந்தன அவள் உதடுகள்.

அவளை நோக்கியபடி அவனது பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன் மெளனமாக.

Read the rest of this entry »

Tags: ,

 

 

அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு night shift வந்து கொண்டிருந்தேன்ஜோவும் பரணியும் பின்பு இந்த கதையின் நாயகனும் கூட ... நாயகனின் பெயர் பிரபு என்றே வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே வேலை இருக்காது என்றாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் சத்தியமாக வேலை இருக்காது. பனிரெண்டாவது தளத்தில் எங்களுக்காகவே கடை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

 

நன்றாக நினைவிருக்கிறதுஅன்று சப்போட்டா ஜூஸ் மட்டுமே இருந்தது.  நான்கு பேரும் சிப்பிக்கொண்டே வழக்கம் போல மொக்கை போட்டுக் கொண்டு இருந்தோம். என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைவில் இல்லை. திடீரென்று பரணி கேட்டான்.

 

நீங்க சொல்லிருக்கணும் பிரபு  .. ”
யார் கிட்ட என்ன சொல்லிருக்கணும்
… ?”
அந்த பொண்ணுகிட்ட உங்க மனசில தோன்றத
..”
ஏன்டா அவன ஏத்தி விடற ?

இல்ல ஜோ .. இவன் சொல்லிருக்கணும் .. சொல்லாம சும்மா பீல் பண்ணிட்டு இருக்கறதுல .. Total waste”

டேய் .. மாட்டேன்னு சொல்லப் போறவகிட்ட எதுக்குடா தேவை இல்லாம சொல்லிட்டு .. அதுவும் இல்லாம I’m Trying to get over her .. போதும் ..

பரணி ஏதோ தீவிரமாக யோசித்தான்.

ஓகே .. இப்படி வச்சுக்கலாம் .. உங்க life இன்னொரு பொண்ணு வர்றா .. happily நீங்க ரெண்டு பெரும் settled ..  உங்களுக்கு ஒரு அறுபது வயசாகுது .. ஒரு வேளை அவ கிட்ட சொல்லிருக்கலாமோன்னு அப்போ தோணினா என்ன பண்ணுவீங்க ? “

கிட்டத் தட்ட எல்லாருக்குமே இந்தக் கேள்வி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.


இப்படி ஆரம்பித்தது தான் வெண்ணிலா. Read the rest of this entry »

Tags: , ,

 

நீங்க பாத்திருகீங்களா அந்த ஏஞ்சல?”

இந்தக் கதைல வர இளவரசனே நான் தான் ..”

 

ஹை ..! அந்த ஏஞ்சலுக்கு விங்க்ஸ் இருந்ததா ..?”

இல்ல ஆனா அவ நடக்கும் போது துப்பட்டா அழகா காத்துல பறக்கும் ..”

 

மந்திரக்கோல்  ?”

அதுக்கு பதிலா ஒரு அழகான செல் போன் எப்பவுமே அவ கைல இருக்கும் .. “

 

வைட் அண்ட் வைட் டிரஸ் ?”

நான் முதல் தடவ பார்த்தப்போ அவ நீல கலர் சுரிதார் போட்ருந்தா ? “

 

 

இது எதுவுமே இல்லாம எப்படி தேவதைன்னு சொல்றீங்க ?”

நீயே பார்த்திட்டு சொல்லேன் … ? ” பர்சில் இருந்த புகைப்படத்தைக் காட்டினேன்.

 

 

ஹய்யோ .. தேவதை மாதிரி இருக்காங்க …”

சொன்னேன்  

 

 

அவங்க பேர் என்ன?”

வெண்ணிலா”

 

—————————————————————————

                                                                                                          நாளை முதல்

Tags: ,

16
Nov

வெண்ணிலா

   Posted by: Rejovasan   in கதை நேரம்

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
……………………………………………………………………………..

நவம்பர் மாத மழையும், நள்ளிரவில் காயும் நிலவும், எனைச் சுற்றிலும் பொழியும் உன்னினைவுகளும் காத்திருப்பதை அசாதாரணமாக்குகின்றன. உறக்கம் கொள்ளாமல் போகின்ற இரவுகளில் எனக்கு நானே கதைகள் சொல்லிக்கொள்கிறேன் என்னைப் பற்றியும் , உன்னைப் பற்றியும் , நம்மைப் பற்றியும் …..  சொல்லிய கதைகளில்  ஒன்று சொல்லிக்கொள்ளாமலேயே உன்னைத் தேடிவந்துவிட, வேறு வழியில்லாமல் நானும் பின்தொடர்ந்திருக்கிறேன்.. ஒருவேளை இந்தக் கதையின் முடிவில் உனைக் கண்டு பிடிக்கவும்  கூடும்.

விரைவில் …

————————————————————————————-

Tags: , ,

 

                 கிட்டத் தட்ட ஒன்னரை வருடங்களாகியிருக்கிறது , ஏற்கனவே எழுதப்பட்ட கதை ஒன்றை எழுதியவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள , என்னை நானே மாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள . 

மோனாரிட்டா சென்ற வருடம் ஜனவரியில் பதிவிடப் பட்டு , ஒரே நாளில் மீண்டும் திருத்தி எழுதலாம் என நீக்கப்பட்டுவிட்ட கதை (??!) . என்னை நானே கொஞ்சமேனும் புரிந்து கொள்ள இந்த நாட்கள் இடம் தந்திருக்கின்றன. நன்றாக இருந்தால் என்ன , இல்லாவிட்டால் என்ன ? , இது என் கதை என்பதில் எந்தவிதப்  பொய்யும் இல்லையே . அதே போல எங்கும் வெறுமையும் வெற்றிடமுமே சந்திக்க நேர்ந்தாலும் இது என் வாழ்கை என்பது தானே நிதர்சனம் .

தேயும் நிலவை ரசிக்கும்  அதே மனதோடு ஓயும் இந்த வாழ்வையும் பார்க்கப் பழகவேண்டுமென்பது மட்டும் தெரிகிறது . விரக்தியா , வெறுமையா என்பது புரியவில்லை ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காயங்கள் ஆறும் , தழும்புகள் மறையக் கொஞ்ச நாட்களாகுமல்லவா?  அல்லது இந்தத் தழும்பு அப்படியே மாறாமல் நின்றும் போகலாம் . கோடையின் தனிமை போன்ற குரு யாருமேயில்லை.

எது எப்படி ஆயினும் இதுவும் கடந்து போகட்டும் .

கல்லூரி இரண்டாவது வருடத்தில்  கதை போல எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே என்னுடன் இருந்து எல்லா இம்சைகளையும் சகித்து வரும் பாலாவிற்கு இந்த நூறாவது பதிவு .

 

 ————————————————————————

 

அண்ட் தென் தே லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர் .

 

புத்தகத்தை மூடி மடியில் வைத்தேன் . எல்லா தேவதைக் கதைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் ஆரம்பிக்கின்றன . சூனியக்காரியோ , கொடுமைக்காரச் சித்தியோ , கிளியில் உயிர் உரித்து வைத்திருக்கும் மந்திரவாதியோ. தேவதைகளோ , ராஜகுமாரர்களோ தான் மாறுகிறார்கள் கதை மாறுவதில்லை . கதையின் முடிவில் முத்தமிடவும்  மறப்பதில்லை .

 

சென்னையிலிருந்து மதுரை  செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் , சரியாக இரவு ஒன்பதரை மணிக்கு அவள் என்னை பார்த்துப்  புன்னகைத்த வினாடியில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது . ஒரு வேளை தேவதைக் கதைகள் இது போலவும் தொடங்கக் கூடும் .

Read the rest of this entry »

Tags: ,

Page 1 of 212