Posts Tagged ‘love letter’

இன்னும் ஒரேமுறை …

 

 

கடிதத்தின் முதல் வரி கிடைக்காமல் இருப்பது குறித்து வருத்தமாயிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சிதறும் வார்த்தைகள் நடுங்கியபடியே இருக்கின்றன நம்பிக்கையின்மையைப் பூசியபடி. மௌனமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. யாருடைய செவிகளும் எனக்குத் தேவையில்லை என உரத்துக் கத்தத் தோன்றுகிறது. ஆனால இருளில் புதைந்து கிடக்கும் கேள்விகளைக் காட்டிலும் , பகலில் நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கும் மௌனமே பயமேற்படுத்துவதாய் இருக்கிறது. உறக்கமின்றியும் கண்கள் மூடியிருக்கவே பிரியப்படுகிறேன், கனவில் ஸ்பரிசித்திருக்கும் உன் உள்ளங்கையின் வெம்மையை நிகழ்விற்கு எடுத்துவர முடியாது என நிச்சயமாய்ப் புரியும் வரை.

 

மார்பெலும்புகளின் குறுக்கே ஆயிரம் தசை நார்கள் பின்னிக்கொண்டு ஒத்திசைத்து அதிர்வது போல உள்ளே உன் பெயரே கேட்டுக் கொண்டிருக்கிறது , கட்டுப் படுத்தமுடியாமல். தொட்டியில் இருந்து எல்லாக் காலைகளிலும் ஆர்வமாய் எட்டிப் பார்க்கும் என் தோட்டத்து ரோஜா , மாலையில் தன் முள்ளெடுத்து தானே குத்திக் கொண்டு மடிந்து போகின்றது. முள்ளில்லாத நான் தொட்டிக்கு நீரூற்றியபடி அடுத்த பூவிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்.

 

ஒரேயொருமுறை உன்னைச் சந்தித்துவிட்டால் போதும், நான் ஜீவித்திருப்பதற்கான ஓட்டைகள் விழுந்த காரணப் பாத்திரத்தைக் கொஞ்சமேனும் நிரப்பிக் கொள்வேன்.

Read the rest of this entry »

Tags: ,

ஏவாள் தோட்டத்து ஆப்பிள்

என் நாட்களில் துயர்மிகு நாள் ஒன்றிற்கான குறியீடுகளை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன் .

வெகுகாலமாய் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க ஒப்புக் கொண்டதற்காக , உடன்பாட்டின் படி குட்டிச் சிறகு கொண்ட தேவதை ஒன்று என் செவிகளையும் கண்களையும் கொய்யும் வினாடியில் அழுதபடி விடியக்கூடும் அந்நாள்.

ஆளில்லாத மேம்பாலமொன்றில் தனியாக நடந்து கொண்டோ , மின் தூக்கியின் பக்கங்களெல்லாம் தனித்து வியாபித்திருக்கும் என் பிம்பங்களில் ஒன்றை, அடுத்த தளத்தில் கதவு திறக்கும்முன் அழிக்க முயன்று கொண்டோ இல்லை இவை எதுவுமில்லாமல் சாளரங்கள் மொத்தமும் இமைகள் மூடிக்கிடக்க, உன் புன்னகை ஒன்றின் நினைவு வெளிச்சத்தில் துயர்மிகு வரிகளை வாசித்துக் கொண்டிருக்கலாம் .

Read the rest of this entry »

Tags: , ,

 நினைவுதிர் காலம்

 

எரிந்து கொண்டிருக்கின்றன என் இரவுகள் .வெறும் புகையாகி மறைகின்றன பகற்பொழுதுகள். வெகுகாலமாய் என் உதட்டிற்குள் உறைந்து போய் கிடக்கும் முத்தமொன்று எதிர்பாராத ஒரு தருணத்தில் தப்பியோடப் போவதாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 

உன் ஸ்பரிசம் பாராமல் நத்தையின் ஓட்டிற்குள் சுருங்கிப்போய் கிடக்கின்றன என் உள்ளங்கை ரேகைகள். உன் நினைவாய் வைத்திருக்கும் தலையணை , உன் கூந்தலச்சுப் பதியாமல் அழுக்கேறி வருகிறது.

 

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கதவிடமும் நீ இன்னொரு கதவின் பின் ஒளிந்திருப்பதாக ஏமாற்றி வருகிறேன். உனக்கென வாங்கிய ஆடைகள் , வெகு நேரம் நீ குளித்துக் கொண்டிருப்பதாய், நான் சொல்லிய பொய்யை நம்பி காற்றிலாடியபடி காத்திருக்கின்றன .

 

என் சதுரங்கப் பலகையில் ஒரு நிறக் கட்டங்கள் மட்டும் தேய்ந்தழிந்து போய் ஒற்றைவழிப் பாதைகளாகி விட்டிருக்கின்றன. என் ஜன்னலுக்கு வெகு தூரமுள்ள மரமொன்று மீண்டும் அரும்பத் துவங்கியிருக்கிறது பறவைகளின் வினோத சப்தத்துடன் .

 

வெயிலுக்கும் உனக்கும் என்ன தொடர்பென்று தெரியாமல் கடந்து போய்விட்டிருக்கிறது இந்த கோடையும்.

 

————————————–

Tags: ,

இந்தத் தெருவின் பெண்

இந்தத் தெருவில் ஒரு பெண் உன் போலவே இருக்கிறாள்.

இங்கிருந்து மூன்றோ நான்கோ வீடுகள் தள்ளியிருக்கும் நீல நிற வீடு அவளது .நட்சத்திரங்களாய் சிதறியிருக்கும் வெள்ளை நிற சங்குப் பூக்களும் ,குரோட்டன் செடிகள் நிறைந்த தொட்டிகளும் அவ்வீட்டின் அடையாளங்கள்.

உன்னைச் சந்தித்தது போலவே மறந்து போன ஒரு நாளில் , தெருவளைவில் முதலில் அவளைப் பார்த்த பொழுது நீ என்று எண்ணியே ஏமார்ந்து போனேன்.ஒரே உயரம் தான் .அவளும் கூட உன் நடையில் தான் நடக்கிறாள்.

Read the rest of this entry »

Tags: ,

தீண்டுமின்பம்

 

 

உன்னிடம் காதலைச் சொல்லப் போகின்ற தருணத்தில் ,அதிகாலைக் கனவொன்றிலிருந்து , வழக்கம் போல மீட்கப்பட்டிருந்தேன் .

 

இன்னும் நான் பார்க்காத அந்த அழகிய கனவு இறங்கியிருந்தது , என் அறை மூலையிலிருந்த விட்டில் பூச்சியுள் . அதன் உறக்கம் கலைக்காமல் கிளம்பிச் சென்றேன் என்னறைக்கு வெளியே , மீண்டுமொரு வழக்கமான நாளுக்குள்ளே.

 

மேகங்கள் இருண்டிருந்த ஏதோ ஒரு பொழுதில் , அறை திரும்பியிருந்தேன்.

 

சாளரங்கள் எல்லாம் திறந்திருந்தும் , வெளிச் சென்றிருக்கவில்லை அந்த விட்டில். முடியவில்லையா , இல்லை முயற்சிக்க வில்லையா என்பதைத் தாண்டி என் கேள்வி , அந்த மீதமிருந்த கனவைப் பற்றியிருந்தது.

Read the rest of this entry »

Tags: ,

ஆம் ! .. நான் மீண்டும் ….

 

அதே போன்ற நாட்களின் சுழலில் சிக்கிக் கொண்டிருப்பதாய் தோன்றுகிறது.

 

நேற்றுவரை எனக்கும் என் அறைச் சுவர்களுக்கும் இடையில் இருந்து வந்த எதுவுமில்லா வெற்றிடத்தில், எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் பெயர் தெரியா பூ ஒன்றின் மணமும் அடர்வும் அறை முழுவதும் , மனம் முழுவதும் .

 

என் ஜன்னலுக்கு வெளியே விடாது மழை பெய்யும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மழைவாசமும் ,மேகம் மொத்தமும் பதியமிட்டிருக்கின்றன மேற்கூரைகளில் .

Read the rest of this entry »

Tags: