வெண்ணிலா … 4
4
Do you want me to tell you something really subversive? Love is everything it’s cracked up to be. That’s why people are so cynical about it. It really is worth fighting for, being brave for, risking everything for. And the trouble is, if you don’t risk anything, you risk even more.
- Erica Mann Jong
குரு.
சண்டாளன். இதுவரை என்னைத் திட்டுவதற்காகவும், புகார் செய்வதற்காகவும் மட்டுமே வாயைத் திறப்பவன் , என்னைப் பார்த்ததும் நரசிமராவ் முகமூடி எடுத்து மாட்டிக் கொள்பவன், எதற்காக என்னைத் தனியாகக் கூப்பிட்டு வெண்ணிலா பற்றி பேசுகிறான் ? ஒரு வேளை அவளுக்கும் தெரிந்து போயிருக்குமோ ? எல்லாருமா என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் ? என்னென்னவோ கேள்விகள் தோன்றினாலும் முதலில் தோன்றியது இது தான்.
“என்னது குருவும் வெண்ணிலாவ லவ் பண்ணானா ? ” கார்த்திக்கும் ஹரிணியும் ஒருசேரக் கேட்டார்கள்.
அந்த நினைப்பில் எனக்குக் கொஞ்சம் வியர்க்கக் கூடச் செய்ததாக நியாபகம்.
ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு மாதிரி ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.
“குட் சாய்ஸ் .. நல்ல பொண்ணு .. ” நெஞ்சில் பாலை வார்த்தான் . அப்பொழுது இவனுக்கு வெண்ணிலா பற்றிய கவலை இல்லை என்றால் ஏன் என்னிடம் தேவை இல்லாத உரையாடல்? அவனே தொடரட்டும் என்று மெளனமாக இருந்தேன்.
“அட்ரெஸ் தவிர அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ..? ”
அட்ரெஸ்? இந்த விஷயம் எல்லாம் இவனுக்கு எப்படித் தெரிந்தது? மானமே போச்சு.
“எங்க தெரிஞ்சிகறது ? அவ தான் யார் கூடவும் எதுவும் பேச மாட்டேங்கறாளே .. உன்னைத் தவிர ..”
“ச்சில் .. விட்டா அடிச்சிருவ போல ..” அவன் சிரித்தது எனக்கு எரிச்சலாக வந்தது. என் சொந்த விஷயம். உனக்கென்ன , போய் வேலையைப் பார் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லியும் இருப்பேன். அவன் அடுத்து அப்படி சொல்லியிருக்காவிட்டால் ..
“ கவலைப் படாத .. நான் ஹெல்ப் பண்றேன் .. ”







