Archive for the ‘காதல் கடிதங்கள்’ Category

ஊதா நிறப் பூக்கள்

 

 

எனக்கு முன்பு தடதடத்துச் செல்லும் ரயிலில் கையசைத்தபடி சென்று கொண்டிருக்கும் நண்பனைப் பற்றியோ, சுற்றியிருப்பவர்கள் பற்றிய ப்ரக்ஞை எதுவுமில்லாமல் எனை ஆக்கியபடி யாருக்கும் கேட்காமல் செவி வழி உயிர் துளைத்துக் கொண்டிருக்கும் பாடல் பற்றியோ, அதைத் திருடிப் பார்த்த்துவிடும் காதலுடன் எனது உடல் துளைத்துக் கொண்டிருக்கும் பெங்களுருவின் குளிர் பற்றியோ உனக்குக் கடிதம் எழுதும் எண்ணம் துளியும் இல்லை அந்தப் பெண்ணையும் அவள் நண்பர்களையும் பார்க்கும் வரை.

எப்பொழுதும் எனக்குள்ளேயே இருக்கும் உனக்கான காத்திருப்போடு, எனக்கான  ரயிலுக்காகக் காத்திருக்கும் எண்ணம் மட்டுமே அதுவரையிருந்தது.

என்னையே தேடச் சொல்லித் தந்து கொண்டிருக்கும் இருள் ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்பதால் எனது ரயில் பெட்டியின் இருட்டு என்னை எதுவும் செய்துவிட வில்லை. இருளின் மௌனத்தில் இங்கும் ஒளிந்துகொள்ளலாம் என்ற நிம்மதி மட்டுமே இருந்தது எனது இருக்கைக்குச் செல்லும் வரை.

தன்னைத் தானே எரித்து உருகியபடி காதலின் முதல் பாடம் கற்றுத் தந்த மெழுகுவர்த்தியும் அதன் மஞ்சள் வெளிச்சமும் ரயிலில் புதிதெனக்கு. கைகளில் மெழுகுவர்த்தி பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரத்தில் உறங்கிவிடலாம் என அனுமதி கேட்ட அவளின் நண்பர்களோ, ஊதா நிறப் பூக்களைக் கைகளில் பற்றிய படி தொந்தரவிற்கு மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண்ணோ, அசிரத்தையாய் எனது பயணச் சீட்டில் கிறுக்கிக் கொடுத்த நடத்துனரோ எனது கண்களில் இல்லவே இல்லை அப்பொழுது.

முழுவதுமாய் கண்களை மறைத்துவிட்டிருந்தது எனக்கு அறிமுகமான உன் முதல் பிறந்தநாளின் ஞாபகங்கள்.

என்ன வேண்டும் எனக் கேட்ட என்னிடம், இதே போன்ற மஞ்சள் நிற மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முகம் முழுக்க இனிப்புப் பூசிய புன்னகையுடன்  கேட்டாய் ஊதா நிறப் பூ ஒன்று கிடைக்குமா என்று. கல்லூரி முழுவதும் தேடியும் ஒரு ஊதா நிறப் பூ கூட கிடைக்கவில்லை அன்றெனக்கு. இன்றென் தோட்டம் முழுதும் ஊதா நிறப் பூக்கள். பிறந்த நாட்களும் இருக்கின்றன. வாங்கிக் கொள்ளத்தான் நீயில்லை.

ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என என்னிடம் கேட்டுக் கொண்டு உன் அலைபேசியின் வாழ்த்துகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாய். ஏன் உனக்கு வாழ்த்துச் சொல்லுகிறார்கள் என்றேன். என் பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தாமல் வேறு யாரை வாழ்த்துவதாம் என்றாய். வாழ்த்த வேண்டியது நீ பிறந்த நாளையல்லவா எனச் சிரித்து, நீ எவ்வளவு கேட்டும் அன்று முழுதும் உனக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருந்தேன்.

இப்பொழுதும் கூட உன் அலைபேசி வாழ்த்துகளைக் காதில் பாடியபடி இருக்கலாம். வாழ்த்தச் சொல்லும் ஆசையுடன் எனைக் கொன்று கொண்டிருக்கிறன உன் அலைபேசி எண்கள்.

வாழ்த்துவதற்கு உன் பிறந்தநாள் மட்டுமே என்னுடன் இருக்கிறது இன்று.

——————————————————————–

 

 

காதல் தேவதை

 

அது ஒரு காலம். கைகளில் கவிதைகளோ கண்களில் காதலோ இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். எப்படியாவது காதல் தேவதையைச் சந்தித்து ஒரு காதலியை யாசித்து விடும் கனவு மட்டுமே இருந்தது.

 

காதலைத் தேடி நான் வெளியே சென்றுவிட்டிருந்த ஒருநாளின் மாலையில் காதல் தேவதை என்னைத் தேடி வீட்டிற்கு வந்திருந்திருக்கிறாள். எதற்காக என்று தெரியவில்லை கொஞ்ச நேரம் காத்து கூட இருந்திருக்கிறாள். நெடு நேரம் பூட்டிய கதவும், சாவி பிரிந்து மௌனித்திருந்த பூட்டும் அவளுக்குச் சலிப்பைத் தந்திருக்கக் கூடும். மாலை மட்டும் பூக்கும் அந்தப் பூவைக் கிள்ளி நொடியில் உன்னைச் செய்து விட்டு, தான் வந்து போனதன் அடையாளமாய் வாசலில் உன்னையும், வானத்தில் நிலவையும் நிறுத்திப் போயிருந்திருகிறாள்.

 

காதல் தேவதையே கவனித்திருந்திருக்கமட்டாள் வானத்திலும் வாசலிலும் ஒரே அடையாளத்தை விட்டுப் போயிருப்பதை. என் வாசல் வானமாகிவிட்டதா இல்லை வானம் என் வாசலுக்கு வந்துவிட்டதா எனக் குழம்பிப் போய் தான் முதலில் உன்னைப் பார்த்தேன் நான். எனக்கான முதல் கவிதையைச் சந்தித்தது கூட அன்று தான்.

 

மீட்டப்படாத இசைக் குறிப்புகள், சந்தித்துப் பழக்கமில்லை எனக்கு. உன் ஒவ்வொரு அசைவிலும் காற்றில் எழுதப் பட்டுக் கொண்டிருந்த புதிய இசைக் குறிப்புகள் தொல்லை செய்துகொண்டே குழப்பவும் செய்தன என்னை. இருந்தும் பார்த்ததுமே பிடித்துப் போன உன்னை என்ன செய்வதென்று மட்டும் புரியவில்லை.

 

காதல் செய்தேன்.

 

காதல் தேவதை வந்து போன கதையைச் சொன்னாய். அதில் நான் தாமதமாய் வந்ததற்காய் மகிழ்வதற்கான காரணங்கள் நிறைய இருந்தது. ஏன் காதல் தேவதையைக் காக்க வைத்தாய் எனக் கேட்டாய் ? ஒரு வேளை உனக்காக இருக்கலாம் என்ற பதிலே தோன்றியது. காதல் தேவதையைக் காக்க வைக்கலாமா என்றாய் ? ஏன் கூடாதென நீ கேள்வி கேட்ட தொனியின் அழகிற்காகவே பதில் சொல்லத் துணிந்தேன்.

 

உன் ஒவ்வொரு வார்த்தைகளின் பிறப்பிடமும், சென்று முடியும் முகவரியும் புன்னகையாகவே இருக்க வேறென்ன செய்வது நான், சத்தமில்லாமல் ரகசியமாய் ,அவற்றைச் சேகரித்து வைப்பதைத் தவிர.

 

எப்படி உன்னை என் எல்லாம் என்று முடிவு செய்ய முடிந்தது என்ற கேள்விக்கான பதில் இன்றும் என்னிடம் இல்லை. எல்லாமாகவும் தோன்றினாய். எதுவும் இல்லாத ஒன்றாகவும் இருந்தாய். எனினும் எப்பொழுதும் உன்னுடனிருக்க மனம் ப்ரியப்பட்டது.

 

இடியோடு கூடிய மழையோடு முத்தமொன்றையும் நாம் பரிமாறிக் கொண்ட அந்த இரவின் அடுத்த நாளில் தான் நீ காணாமல் போயிருந்தாய். காதல் தேவதை திரும்பி வந்திருந்தாள்.

 

உன்னைப் பற்றிக் கேட்டதற்கு, தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு என்றாள். அவளிடம் எப்படிச் சொல்ல நீ தான் எனது அடையாளம் என்பதை.

 

எதற்காக என்னைத் தேடிக் கொண்டிருந்தாய் எனக் கேட்டு ஓயாமல் பேசியபடி இருக்கும் காதல் தேவதையிடம், அவளைப் போய் விடச் சொல்லி விட்டு, சொல்லிக் கொள்ளாமலே சென்று விட்ட உன்னை இரண்டு அறைகள் தந்து உடனே அனுப்புமாறு கேட்கும் வார்த்தைகள் இதயத்திற்கும் உதடுகளுக்கும் இடையே உழன்று கொண்டிருக்கின்றன.

—————————————————————-

இரவினைக் கொல் …

 

வார்த்தைகள் எல்லாம் சிதறிப் போய் , உள்ளிருந்து உடைத்துக் கொண்டு , கண்கள் கிழிந்து போகும் படி கண்ணீர் பீரிட்டு வருகையில் எப்படி உனக்குக் கடிதம் எழுதுவதுஇருந்தும் இந்த இரவில் உனக்குக் கடிதம் எழுதித் தான் ஆக வேண்டும்.

வெளிர் நீல வானத்தில் மறைந்து கொள்ள மேகமில்லாமல் நிலா அழுவதைப் பார்த்து விட்ட பிறகு  , என் பெயர் எழுதிய நட்சத்திரமொன்று வெடித்துச் சிதறி விண்ணில் சரிவதை நேர் கொண்டு விட்ட பிறகு , தனியே ஒரு பறவை உறக்கம் கொள்ளாது அகாலத்தில் ஓலமிட்டபடி பாதை தெரியாமல் தவித்துப் பறப்பதற்கு சாட்சியாகி விட்ட பிறகு எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நீ கடைசியாய் எனக்கு இட்டுத் தந்த கையொப்பம் என் விரல்களில் ஏறி விளையாடியபடி இருக்கிறது. இன்னொரு புறம் புகைப்படத்திலிருந்து இறங்கிவந்து விடும்படி இறைஞ்சிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய். போதுமென கண்கள் பொத்திக் கொண்டு வீடு தாண்டி ஓடி வந்தால், இலைகள் எல்லாம் உதிர்ந்து போன கிளைகள் வழி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலா , பொம்மை போல உறங்கிக் கொண்டிருக்கும் உன்னையும் சாளரத்துக் கம்பிகள் வழி பார்த்துக் கொண்டிருக்குமா என நினைக்கச் சொல்லுகிறது. எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நாளையும் இதே போல ஒரு இரவும் நிலவும் உண்டு எனத் தெரிந்து விட்ட பிறகும் எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

வேண்டுமானால் எழுதிய கடிதங்கள் அத்தனையும் கிழித்தெறியத் தயார். ஒன்று மட்டும் செய். எப்படியாவது எனக்கான இரவுகளைக் கொன்று விட வழி சொல். நீ இல்லாமல் வெறும் இரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் நான் ?

 

———————————————————————–

 

 

 

 

அம்மாவும் நீயும் …

 

 

 

உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் அம்மாவிடம். எப்பொழுதும் உன் பெயரைச் சரிகமபதநி எனச் சங்கீதமாய் சுரம் பிரித்துச் சொல்வதிலிருந்து தொடங்கும் அது. கூடவே உன் பெயரோடு என் பெயரை இணைத்துச் சொல்லுவாள் அவள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு. என் கவிதைகள் எப்பொழுதுமே அவளுக்குக் கேலிப்பொருட்கள்.

 

உன் கண்கள் பற்றிச் சொல்ல வாளும், வேலும், மீனும் போதுமா என்பாள். உன் முகம் பற்றிப் பேச நிலா தாண்டி போகமாட்டாயா என சொல்லிச் சிரிப்பாள். எப்பொழுதும் தொங்கும் காதணி , சிரிக்கும் கொலுசுகள் ஏன் எனக் கேட்பாள். எனக்குப் போட்டியாய் உன் பின்னே சுற்றி வரும் பட்டாம்பூச்சிகளைப் பிழைத்துப் போகும்படி விட்டு விடச் சிபாரிசு செய்வாள்.

 

என் கவிதைகள் எதுவுமே தன்னைப் போலில்லாத பொழுது , நான் எப்பொழுதும் உன்னை அவள் போலவே இருப்பதாகச் சொல்லுவது ஏன் எனக் கேட்டு நகைப்பாள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு.

 

அதனால் தான் உன்னைப் பற்றியும் , என் காதல் பற்றியும் நான் சொல்லியதை ஒரு போதும் நம்பியதேயில்லை அவள். மிகவும் பிரயாசைப் பட்டு உன் பெயரை நான் உச்சரிக்கும் தருணம் தான் என் நடிப்பின் உச்சம் என்பாள்.

 

அவளைப் போலவே இருப்பதால் தான் என்னவோ , உனக்கும் என் காதல் தெரிவதே இல்லையா ?

 

———————————————————–

கனவும் மழையும், ஒருவேளை நீயும் … ?

 

 

 

கனவு பற்றியோ , மழை பற்றியோ இல்லை உன்னைப் பற்றியோ  மீண்டும் எழுதப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன் . எப்படி வருடும் கனவும்,  வருத்தும் மழையும் என் கண்களிலேயே ஒட்டிப்போய் விட்டனவோ ,அது போலவே நீயும்.

 

ஆனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.

 

இரவா பகலா , விழிப்பா மயக்கமா எனத் தெரியாத மீள முடியாத தருணமொன்றின் வெகு ஆழத்தில் மூழ்கிய நிலையில் நான். உன் பெயரின் ஓங்காரம் மட்டும் இசையெனப் பெய்துகொண்டிருந்த என் செவிக்குள் மழை மெல்ல ஒழுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தபடி இருந்தேன். கடைசியாக வானவில் பார்த்தது என் நினைவில் இல்லை. மழையின் ஸ்பரிசம் கூட மறந்து தான் விட்டிருந்தேன். கடுங் கோடை மட்டுமே வெகுநாட்களாய் என்னைக் குடித்துக் கொண்டிருக்கையில் என்னை மறந்து போய் விட்டிருந்த மழையை எப்படி நம்ப முடியும் .

 

அதனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.

 

உனக்கான கடிதங்களை மென்று மென்று விழுங்கி உடலின் ஏதோ ஒரு பகுதியில் , ஆலகால விஷமென பதுக்கிவிட்டிருந்த என் கண்களில் நீராய் தப்பியோடிக் கொண்டிருந்தன அவைகள். என் உயிர் வற்றிப் போய் பலநாட்களாகி இருக்கையில் எப்படி நம்புவது வழிவது வெறும் நீரென்று.

 

கண்களுக்கும் தெரியும் இதுவெறும் கனவென்று.

 

வெகு நாட்களாய் உனக்கென காத்திருந்து இற்றுப் போயிருந்த கதவில் , கேட்கும் வளையோசை உன்னுடையாதாக இருக்க வாய்ப்பில்லாத பொழுது , கதவு திறந்த என் முன் நிற்பது மட்டும் எப்படி நீயாக இருக்கமுடியும். வெகுநாட்களாய் நானே கூட உடனில்லாத நான் மட்டும் இருப்பது , சுற்றிலும் எதிரொலிக்கும் வெறுமைக்கும் தெரியும் என்பதால் , நீயில்லாத வீடென்று புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் சிலந்திகளுக்கும் தெரியும் ,இது கனவு மட்டுமேயென்று.

 

உடனிருக்கப் பிரியமின்றி கனவுகள் கூட பாதியில் சென்றுவிட்ட தருணத்தில் , இனியும் உறங்குவதில் அர்த்தமில்லையென விழித்திருந்தேன்.

 

வழக்கத்திற்கு மாறாக குளுமையை உணரமுடிந்தது என்னால். கண்கள் கூட சிவந்திருப்பதாய்த் தான் நம்ப வைக்க முயன்று கொண்டிருந்தது கண்ணாடி. கதவுகள்  கூடத் திறந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வீதி முழுதும் நனைந்திருப்பதைக் கண்டேன். மழை பெய்து கொண்டிருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த என்னைக் கேலி செய்வது போலிருந்தது , இரவு முழுதும் சேகரித்து வைத்திருந்த மழையை உதிர்த்துக் கொண்டிருந்த சிட்டுக் குருவியின் செய்கை.

 

கதவருகே உடைந்து சிதறியிருந்த கண்ணாடித் துண்டுகளைக் கண்ட தருணத்தில் தான் , மார்பில் அடித்தபடி சகதியாகிப் போயிருந்த தெருவின் வழி ஓடத் துவங்கினேன் உன் கால் தடங்களைத் தேடியபடி.

 

——————————————————————-

இன்னும் ஒரேமுறை …

 

 

கடிதத்தின் முதல் வரி கிடைக்காமல் இருப்பது குறித்து வருத்தமாயிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சிதறும் வார்த்தைகள் நடுங்கியபடியே இருக்கின்றன நம்பிக்கையின்மையைப் பூசியபடி. மௌனமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. யாருடைய செவிகளும் எனக்குத் தேவையில்லை என உரத்துக் கத்தத் தோன்றுகிறது. ஆனால இருளில் புதைந்து கிடக்கும் கேள்விகளைக் காட்டிலும் , பகலில் நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கும் மௌனமே பயமேற்படுத்துவதாய் இருக்கிறது. உறக்கமின்றியும் கண்கள் மூடியிருக்கவே பிரியப்படுகிறேன், கனவில் ஸ்பரிசித்திருக்கும் உன் உள்ளங்கையின் வெம்மையை நிகழ்விற்கு எடுத்துவர முடியாது என நிச்சயமாய்ப் புரியும் வரை.

 

மார்பெலும்புகளின் குறுக்கே ஆயிரம் தசை நார்கள் பின்னிக்கொண்டு ஒத்திசைத்து அதிர்வது போல உள்ளே உன் பெயரே கேட்டுக் கொண்டிருக்கிறது , கட்டுப் படுத்தமுடியாமல். தொட்டியில் இருந்து எல்லாக் காலைகளிலும் ஆர்வமாய் எட்டிப் பார்க்கும் என் தோட்டத்து ரோஜா , மாலையில் தன் முள்ளெடுத்து தானே குத்திக் கொண்டு மடிந்து போகின்றது. முள்ளில்லாத நான் தொட்டிக்கு நீரூற்றியபடி அடுத்த பூவிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்.

 

ஒரேயொருமுறை உன்னைச் சந்தித்துவிட்டால் போதும், நான் ஜீவித்திருப்பதற்கான ஓட்டைகள் விழுந்த காரணப் பாத்திரத்தைக் கொஞ்சமேனும் நிரப்பிக் கொள்வேன்.

Read the rest of this entry »

ஏவாள் தோட்டத்து ஆப்பிள்

என் நாட்களில் துயர்மிகு நாள் ஒன்றிற்கான குறியீடுகளை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன் .

வெகுகாலமாய் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க ஒப்புக் கொண்டதற்காக , உடன்பாட்டின் படி குட்டிச் சிறகு கொண்ட தேவதை ஒன்று என் செவிகளையும் கண்களையும் கொய்யும் வினாடியில் அழுதபடி விடியக்கூடும் அந்நாள்.

ஆளில்லாத மேம்பாலமொன்றில் தனியாக நடந்து கொண்டோ , மின் தூக்கியின் பக்கங்களெல்லாம் தனித்து வியாபித்திருக்கும் என் பிம்பங்களில் ஒன்றை, அடுத்த தளத்தில் கதவு திறக்கும்முன் அழிக்க முயன்று கொண்டோ இல்லை இவை எதுவுமில்லாமல் சாளரங்கள் மொத்தமும் இமைகள் மூடிக்கிடக்க, உன் புன்னகை ஒன்றின் நினைவு வெளிச்சத்தில் துயர்மிகு வரிகளை வாசித்துக் கொண்டிருக்கலாம் .

Read the rest of this entry »

 நினைவுதிர் காலம்

 

எரிந்து கொண்டிருக்கின்றன என் இரவுகள் .வெறும் புகையாகி மறைகின்றன பகற்பொழுதுகள். வெகுகாலமாய் என் உதட்டிற்குள் உறைந்து போய் கிடக்கும் முத்தமொன்று எதிர்பாராத ஒரு தருணத்தில் தப்பியோடப் போவதாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 

உன் ஸ்பரிசம் பாராமல் நத்தையின் ஓட்டிற்குள் சுருங்கிப்போய் கிடக்கின்றன என் உள்ளங்கை ரேகைகள். உன் நினைவாய் வைத்திருக்கும் தலையணை , உன் கூந்தலச்சுப் பதியாமல் அழுக்கேறி வருகிறது.

 

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கதவிடமும் நீ இன்னொரு கதவின் பின் ஒளிந்திருப்பதாக ஏமாற்றி வருகிறேன். உனக்கென வாங்கிய ஆடைகள் , வெகு நேரம் நீ குளித்துக் கொண்டிருப்பதாய், நான் சொல்லிய பொய்யை நம்பி காற்றிலாடியபடி காத்திருக்கின்றன .

 

என் சதுரங்கப் பலகையில் ஒரு நிறக் கட்டங்கள் மட்டும் தேய்ந்தழிந்து போய் ஒற்றைவழிப் பாதைகளாகி விட்டிருக்கின்றன. என் ஜன்னலுக்கு வெகு தூரமுள்ள மரமொன்று மீண்டும் அரும்பத் துவங்கியிருக்கிறது பறவைகளின் வினோத சப்தத்துடன் .

 

வெயிலுக்கும் உனக்கும் என்ன தொடர்பென்று தெரியாமல் கடந்து போய்விட்டிருக்கிறது இந்த கோடையும்.

 

————————————–

இந்தத் தெருவின் பெண்

இந்தத் தெருவில் ஒரு பெண் உன் போலவே இருக்கிறாள்.

இங்கிருந்து மூன்றோ நான்கோ வீடுகள் தள்ளியிருக்கும் நீல நிற வீடு அவளது .நட்சத்திரங்களாய் சிதறியிருக்கும் வெள்ளை நிற சங்குப் பூக்களும் ,குரோட்டன் செடிகள் நிறைந்த தொட்டிகளும் அவ்வீட்டின் அடையாளங்கள்.

உன்னைச் சந்தித்தது போலவே மறந்து போன ஒரு நாளில் , தெருவளைவில் முதலில் அவளைப் பார்த்த பொழுது நீ என்று எண்ணியே ஏமார்ந்து போனேன்.ஒரே உயரம் தான் .அவளும் கூட உன் நடையில் தான் நடக்கிறாள்.

Read the rest of this entry »

தீண்டுமின்பம்

 

 

உன்னிடம் காதலைச் சொல்லப் போகின்ற தருணத்தில் ,அதிகாலைக் கனவொன்றிலிருந்து , வழக்கம் போல மீட்கப்பட்டிருந்தேன் .

 

இன்னும் நான் பார்க்காத அந்த அழகிய கனவு இறங்கியிருந்தது , என் அறை மூலையிலிருந்த விட்டில் பூச்சியுள் . அதன் உறக்கம் கலைக்காமல் கிளம்பிச் சென்றேன் என்னறைக்கு வெளியே , மீண்டுமொரு வழக்கமான நாளுக்குள்ளே.

 

மேகங்கள் இருண்டிருந்த ஏதோ ஒரு பொழுதில் , அறை திரும்பியிருந்தேன்.

 

சாளரங்கள் எல்லாம் திறந்திருந்தும் , வெளிச் சென்றிருக்கவில்லை அந்த விட்டில். முடியவில்லையா , இல்லை முயற்சிக்க வில்லையா என்பதைத் தாண்டி என் கேள்வி , அந்த மீதமிருந்த கனவைப் பற்றியிருந்தது.

Read the rest of this entry »