Archive for the ‘ஆதலினால் கவிதை’ Category

 

எல்லாரும் உறங்கிப்போன

இரண்டாம் சாமங்களின் இருண்ட பக்கங்களில்

விழித்தெழுந்து உலவத் துவங்குகின்றன

கரப்பான்கள்

 

காற்றின் அந்தரங்கப் பிரதேசங்களில்

தம் வாழ்வின் ரகசியங்களை

நீண்ட பெரு மீசையால்

துழாவியபடி இருக்கின்றன

Read the rest of this entry »

 

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்

சுடும் கரை மணல் தொடுகையிலும் …

 

நிசப்த்தமான தெருக்களில்

நீண்ட தனி நடைகளிலும் …

 

மழை முடிந்த பின்

ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

 

கூட ஒட்டி வரும் தனிமையிலும்  

 

தேடிப்பார்க்கிறேன்

நாம் சந்தித்ததற்கான தடையங்கள்

ஏதேனும் உளதா என ..

Read the rest of this entry »

  

 

 

யாமம் கூடிய சிறுபொழுதுகளிலும்

முன்பனி மூடிய பெரும்பொழுதுகளிலும்

ஆடித் திரியும் பறவைகளின் மேல்

கண்வைத்துக் கொண்டேயிருக்கிறது காலம் …

 

நூலிழை பிறழாமல் குறி தேடிச் சென்று

சிதைத்துச் சிதறடிக்கும்

வன்மம் கொண்ட தோட்டாக்கள் அதனிடம் ..

 

இளவெயிற் கதிர்களில் மிதக்கையிலோ

இணையுடன் கூடிச் சுகிக்கையிலோ 

நிழலினிற் பதுங்கிக் கிடக்கையிலோ

நித்திரைக் கனவினிற் தன்னை மறக்கையிலோ  

 

 

நினைவு பிறழ்ந்து தோட்டாவைத் தான்

பாய்சிடக் கூடுமென்று மிரட்டி

பேச்சுவார்த்தைக் கழைக்கிறது

பறவைகளை அது ..

 

தங்க இருக்கைகளைக் காட்டி

கழற்றித் தந்துவிடு இறகுகளை யெனக்

கேட்கிறதது ..

 

எதிர்த்துப் பேசும் பறவைகள்

வாயிலேயே சுடப்படுகின்றன

 

மீதமுள்ள பறவைகள்

இறகுகளைக் கழற்றித் தந்து விட்டு

இருக்கைகள் தந்த காலத்திற்கு

நன்றி சொல்லிக் கொண்டே ,

அமர்ந்தபடி

காலத்திற்கும் மென்றுகொண்டே யிருக்கின்றன

இறந்த பறவைகளின் சவங்களையும்

இணங்க மறுத்த மடத்தனங்களையும் .

ஓடிவிட்ட பல மாதங்களுக்குப் பின்னே

இருளின் நிழல் படிந்த

நகரின் முக்கியமில்லாத

ஏதோ ஒரு தெருவில்

சாலையின் எதிர்ப்புறத்தில்

அவளைச் சந்திக்க நேர்ந்தது

அல்லது அது அவளையொத்த

அடையாளங்களாகவும் இருக்கலாம்

கரைந்துக் கொண்டிருக்கும்

அந்நிழலைப் பார்த்திருந்த

அந்தப் பத்து வினாடிகளில்

காலத்தின் கொடிய கூர்

பற்சக்கரங்கள் போதியமட்டு மென்னை

நசுக்கி முடித்திருந்தன

வலி தாங்க மாட்டாமல்

தலை குனிந்து மீண்ட சமயத்தில்

மறுபடியும் காணாமல் போயிருந்தாள்

விரும்பி ஏற்றுக்கொண்ட

வெறுமை அப்பிய என் முகம் பார்த்து

ஜன்னலோரப் பேருந்திலிருந்து

கை காட்டிச் சிரித்தபடிச் செல்கிறது

சீருடை யணிந்த ஒரு குழந்தை

பதிலுக்குக் கைகாட்டிப் புன்னகைக்கிறேன்

நானும்

என்றேனும் ஒரு நாள்

நகரத்தின் ஏதோ ஒரு பக்கத்தில்

மீண்டும் உன்னைச் சந்திக்க நேரும்

அந்தப் பத்து வினாடிகள் வரும் வரை

என் நினைவுகளை விட்டு விலகி

இருப்பாயாக

Page 6 of 6« First...23456