Archive for the ‘சுவடுகள்’ Category

 

 

நேற்று என்பது மீட்டப்பட்டுவிட்ட இசைக் குறிப்புகளைப் போல .. அழகானது எனினும் எவ்வளவு முயன்றாலும் எப்பொழுதுமே  மீண்டும் மீட்ட முடியாதது.. மாறாக ஒரு அழகான மாலை நேரத்தில் ஒரு கோப்பைத் தேநீருடன் , பதிவு செய்யப்பட அதே இசைக் குறிப்புகளைக் கேட்டு ரசிக்கலாம் ..

 

ஆகஸ்ட்  4, 2003 … தேடலுடனும்  , குறுகுறுப்புடனும்  , புது இடம் , புதிய சூழ்நிலைகள்  பற்றிய பயத்துடனும்  வாழ்வின் ஒரு புதிய பயணத்தில் நுழைந்த நாள் …. எல்லாமே நட்பு பார்த்துக் கொண்டது .. இன்று எங்கள் பயணத்தின் ஏழாவது வருடம் துவங்குகிறது …

 

நாங்கள் மீட்டிய சில இசைக்குறிப்புகளை உங்களோடு சேர்ந்து ரசிக்க விரும்புகிறேன் …

 

நாங்களே இசையமைத்து இயக்கிய கல்லூரி பாடலுக்காக எழுதிய வரிகள் ..  எங்கள் கல்லூரிக்காக ….  

Read the rest of this entry »

2
Aug

நாடோடிகள்

   Posted by: RejovasanTags: , , , ,

நாங்க நாலு பேரு :-)

நாங்க நாலு பேரு :-)

எங்களின் பாதைகள்

கிளைபிரிந்திருக்கலாம் …

எங்களுக்கான பயணங்கள்

வெவ்வேறு திசைகளில்

பணிக்கப்பட்டிருக்கலாம் …

இருந்தும்

நாட்கள் கழித்து மீண்டும்

சந்திக்கையிலெல்லாம்

கணநேர மௌனங்கள் சொல்லிடும்

நாங்கள் யார் என்பதை ….

நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் . ஆனால் உங்கள் நெருக்கமானவர்களை நாங்கள் நினைவுபடுத்தப் போவது மட்டும் உறுதி .

Read the rest of this entry »

சில விஷயங்கள் அமையப் பெற்றதற்காக சில சமயங்களில் மட்டுமே கர்வங் கொள்ள முடியும் . அது போன்ற ஒரு தருணம் தான் இதுவும் . சில காலங்கள் பார்த்துப் பார்த்து ரசித்து விட்டு , முதல் நாள் வகுப்பில் நுழையும் ஒரு குழந்தையின் தயக்கத்துடனும் , காதலைச் சொல்லப் போகும் தவிப்புடனும்  சில கவிதைகளுடன் நேற்று தான் பதிவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது . மழையில்லாத ஒரு  மாலை நேரத்து  மின்னல் போல்  சட்டென்று கடந்து போய்விட்டது ஒரு வருடம் . எத்தனை உறவுகள் , எத்தனை பரிவுகள் , எத்தனை உரிமையான செல்லக் குட்டுகள் …

 

உங்கள் அத்தனை அன்புக்கும் மௌனங்கள் மட்டுமே பதிலாய் என்னிடம் .. இந்த வாரம் மேகத்தில் மிதப்பதற்கு என எனக்கு எழுதி வைக்கப் பட்டிருக்கிறது போலும் . திங்களன்று உயிரோடை முடிவுகள் .. நேற்று சுவாரசிய தளத்திற்கான தேர்வு .. அதுவும் நான் வியந்து உள்வாங்கும் கவிதைகளின் சொந்தக்காரர் பிரவின்ஸ்காவிடமிருந்து ..

 

 

 

 

 

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா .. !  உங்கள் அறிமுகத்தை நியாப்படுத்த முயன்ற வரை முயற்சி செய்கிறேன் .. :-)  

 

 

ஏனென்று தெரியவில்லை (அட நெஜமா பா ! ) என் கவிதைகள் காதலைத் தழுவிக்கொண்டோ இல்லை அதன் நிழலின் பின் ஒளிந்து கொண்டோ தான் எட்டிப்பார்த்திருக்கின்றன . இதுவரையிலும்…..  அவள் சில அழகிய குறிப்புகளும் , கனவில் வருபவளிலும் கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ !   சேரல் சொன்னது போல் அழகான விடுமுறை தரலாமோ காதல் கவிதைகளுக்கு ?  தரலாம் :-)

 

எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட  , ஆரம்ப நாட்களைப் போல ….

 

பரிட்சார்த்தமான சில கதை முயற்சிகளையும் , காதலல்லாத கவிதைகளையும் தர முயற்சி  செய்கிறேன் . உங்கள் அன்பும் , சில செல்லக் கண்டிப்புகளும் எப்பொழுதும் என்னுடன் என்ற நம்பிக்கையுடன் ..

 

 

நன்றி பிரவின்ஸ்கா !

 

நன்றி நண்பர்களே !

 

 

 

ப்ரியமுடன் ,

ரெஜோ

 

 

பின்குறிப்பு :

 

           இந்த விருதை இன்னும் ஆறு பேருக்குத் தர வேண்டும் . கிட்டத் தட்ட என் பிரியமானவர்கள்  விரும்பும் தளங்கள்,   அனைவரும் அனைத்தும் பரிந்துரை செய்யப் பட்டுவிட்டதால்  புதியதாக தளம் ஆரம்பித்திருக்கும் , ஆரம்பிக்கப் போகும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளோடு முடித்துக் கொள்கிறேன் .

 

 

ஒருவேளை வெறும் சம்பிரதாயமாக  போய்விடுமோ என எண்ணி தான் இரண்டு நாட்களாக இதைப் பதிவிடாமல் இருந்தேன் . இருந்தும் மனதில் இருப்பதைச் சொல்லித் தானே ஆக  வேண்டும் .

 

உயிரோடை முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகின்றன . வெகு நாட்கள் கழித்து வெற்றி தோல்வி பற்றி யோசிக்க வைத்த ஒன்று இப்போட்டி .

 

முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது வடகரை வேலனுக்கும் , வெயிலானுக்கும் தான் . எனது தளத்தினை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி , அவ்வப்பொழுது தங்கள் கருத்துகளைத் தெரிவித்து , தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்குபெறத் தூண்டியவர்கள் அவர்கள் தான் . உங்களுக்கு என்றுமே நான் கடமைப் பட்டிருக்கிறேன் .

 

 

சேரல் .  எனது பிரியத்திற்குரிய அண்ணா . கல்லூரியில் நாங்கள் எல்லாம் அ  ன்னா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கையில் , மரபை மீறிய கவிதைகள் பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தவர் . சேரல் பற்றி சொல்லி விட்டு ப்ரவின்ஸ்கா பற்றி சொல்லாவிட்டால் எப்படி :-) இவர்கள் இருவரும் எனது தளத்தைப் படிக்கிறார்கள் என்பதே நான் வானில் பறக்கப் போதுமானது. ஏதாவது பின்னூட்டம் வந்தால் சொல்லவும் வேண்டுமா …

 

யாரையாவது  பார்த்து  என்னைப் போலவே பேசுகிறானே , யோசிக்கிறான் என்று தோன்றியதுண்டா ? அப்படி எனக்குத் தோன்றிய அன்பர் தான் சத்யமணி . இன்னும் வலைத்தளம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவர் அழகான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் . வாழ்த்துகள் தோழர் :-)

 

எனது கவிதைகளை ஏதாவது ஒன்று உருப்படி என்பதை அனுஜன்யாவும் , கே.ரவிஷங்கரும் நன்று என்று ஒரு வார்த்தை சொன்னாலே வகைப் படுத்திக் கொள்வேன் .:-)

 

மச்சான் ரிஜோ என்று செல்லமாக குட்டு வைக்கும் இளவரசன் , சார் சும்மா கவிதைன்னு இப்படி எல்லாம் எழுதக் கூடாது என்று கேள்விகளாகக் கேட்கும் அப்பாஸ் , நன்றாக இருக்கிறது என்பது தவிர வேறெதுவும் இதுவரை சொல்லாத ரேவதி எல்லாருமே என் சக பயணிகள் .

 

எல்லாவற்றுக்கும் மேல் எப்பொழுதும் என்ன எழுதினாலும் முதலில் படித்து உள்ளதை உள்ளபடிச் சொல்பவர்கள்  என் பிரியத்திற்குரிய நண்பன் பாலாவும் , பிரிய தங்கை சத்யாவும் . அவர்களுக்கு நன்றிகள் எல்லாம் கிடையாது , எப்பொழுதும் என் எழுத்துகளை முதலில் படிக்கும் தண்டனை மட்டுமே .

 

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனைக்கும் காரணமான உயிரோடை  லாவண்யா அவர்களுக்கும் , போட்டி நடுவர்களுக்கும் நன்றிகளும் , அவர்களின் இந்த சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகளும் :-) .

 

போட்டியில் வெற்றி பெற்ற , மற்றும் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :-)  

 

 

மேலும் எப்பொழுதும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நண்பர்களுக்கும் , பின்னூட்டத்தில் வாழ்த்திய நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகளும் அன்புகளும் :-)  

 

ப்ரியமுடன் ,

ரெஜோ 

 

 

சில இடைவெளிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன . சில காரணங்களுக்கெனவே பிரித்து  வைக்கப்பட்டிருக்கின்றோம். சில புரிதல்களுக்காகத்  தான்  வெயிலும்  வருகிறது .

 

கடந்த நான்கு நாட்கள் பெங்களுரு மெட்ரோவில் .வெயில் படாத பிரதேசம் அது. கொஞ்சமேனும் வெயில் தலை காட்டினாலும் கூடவே மழை விரட்டி வருகிறது .

 

சென்னையின் வெயிலுக்கு பயந்து கொண்டு ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து கொண்டு ரயிலேறி , கே.ஆர்.புரத்தில் இறங்கிய பொழுது மணி அதிகாலை நான்கு. இறங்கியதுமே குளிர் ஒரு சட்டைக் கையின் வழியாக ஏறி மறுபுறம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது.ஆனால் நன்றாகவே இருந்தது அந்தத் தழுவல். பாலா (உங்களுக்கு வழிப்போக்கன் பாலா ) ஜெர்கின் எல்லாம் போர்த்திக் கொண்டு , கடமை உணர்ச்சியுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு (நான்கு  மணி !!!) ஒரு செட் அப் ஆகத் தான் வந்திருந்தார்.

 

வீட்டுக்குப் போனதும் தனியாக மெத்தை எடுத்துப் போடுகிறார். போர்த்திக் கொள்ள நமீதா போர்வை குடுக்கிறார் .காலை எழுந்தால் பற்பசையோடு நிற்கிறார். இன்னொரு கையில் சூடாக  ஹார்லிக்க்ஸ்.குளிக்க வெந்நீர் போடட்டுமா என்ற கேள்வி வேறு. வேண்டாமப்பா இந்தத் ‘தண்’ணீருக்கு மார்கழிவரை காத்திருக்க வேண்டும் சென்னையில்.எனக்கு இதுவே போதும். குளித்து விட்டு வந்தால் தேங்காய் சட்னி அரைத்து தோசை வேறு சுட்டு வைத்திருக்கிறார். டேய் நீ எல்லாம் ஒரு பேச்சுலரா ?? ஷேம் ஷேம் … அதாகப்பட்டது இந்தப் பாரா எதுக்காகன்னா ஒரு நல்ல குடும்ப இஸ்த்தன் தயார்.பெண்கள் அணுக வேண்டிய முகவரிக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும் .

Read the rest of this entry »

15
May

மீண்டும் 15 …

   Posted by: RejovasanTags:

 

 

 

இன்னும் ஓர் வருடம் .. கல்லூரி நாட்கள் முடிந்து போய் ..

 

பார்க்கையில் சில பிரிவுகள் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது . சென்ற வருடம் போன்ற , உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் எதையும் எழுதத் தோன்றவில்லை. இது ஒரு மறக்க முடியாத நாள் என்பதில் மட்டும் எந்த மாறுதலும் இல்லை .

 

மனமும் , உடலும் கொஞ்சமேனும் மாறி இருக்கின்றன. பார்க்கும் பார்வைகளும் , அவைகள் குறித்தான அவதானிப்புகளும் வேறு விதமாகியிருக்கின்றன. தினம் பேருந்தோ ஏதோ ஒன்று ஏறி  அலுவலகம் செல்லும் கட்டாயங்களாலும் , கண் எதிர் படும்  உணவகங்களில் பசியாறும் பழக்கங்களாலும்  , எனக்காக வாழ்ந்த நாட்கள் ice age காலத்திய மாமூத் யானையின் தந்தங்களாய் மனதின் கீழ் அடுக்குகளில் உறைந்து கொண்டிருக்கிறது .

Read the rest of this entry »

30
Aug

15

   Posted by: RejovasanTags:

மே 15 ,2007.

மறக்க முடியாத நாள் .

கடைசி தேர்வெழுதிய நாள் . கல்லூரி வாழ்வின் கடைசி நாள் .

 

அதன் பின் எவ்வோளவோ காட்சிகள் கண்கள் கண்டிருப்பினும் ,கல்லூரி நினைவுகளில் கண்மூடுகையில் எல்லாம் கண்முன்னே விரிகிறது அந்த நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும் .

 

அதன் பின் எவ்வோளவோ ஒலிகளைக் கேட்டிருப்பினும் , இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும் , காகிதங்கள் திருப்பும் சர சரப்பும் , மின் விசிறிகளின் சுழல் சத்தமும் , இதயம் போலவே விட்டு விட்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு குழல் விளக்கின் முணு முணுப்பும் …..

 

எப்பொழுதும் அதிசீக்கிரம் தேர்வறை விட்டு ஓடும் பழக்கம் மறந்து போய் , நடக்க மறந்து போன முடவன் போல இருக்கையில் ஒட்டிக் கொண்டு , அதன் வேகத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் நின்று விடக் கூடாதா என்ற வலி மனதெங்கும் .. சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையின் கடைசி பக்கக்கங்கள் நெருங்கிவிட்டது என்னும் பர பரப்பை மீறிய வேதனை ..

 

எத்தனையோ பேரை பார்த்த நிதானத்தில் , இயல்பாகத் தான் இருந்தது கல்லூரி ..

 

இயல்பு மீறி கல்லூரி முதல் நாள் அணிந்த சட்டையை தேடி அணிந்து , எழுதுபகரணங்கள் சகிதம் வந்து , தேர்வு நேரம் முடிந்த பின்னும் எழுந்து போக மனமின்றி , ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , முதல் நாள் பள்ளி செல்ல அடம் பிடித்து மறுத்த அதே மனம் கடைசி நாள் கல்லூரி விட்டு செல்ல ….

 

அதே குழந்தை மனம் .. எல்லார் முன்னும் அழ வெட்கமில்லை அதற்கு .. நாற்காலியில் பெயர் கிறுக்குவது அநாகரீகம் என்று படவில்லை … அடுத்த வெள்ளையடிப்பில் நிச்சயம் மறைந்து போகும் எனத் தெரிந்தும் சுவர்களில் பெயர் கிறுக்க மறக்கவில்லை ..அத்தனை பேரையும் கையெழுத்தில் அடக்கிவிட முயலும் எண்ணம் முட்டாள் தனமில்லை அதற்கு … வருடுகையில் உயிர் பெற்று நம்மை சுற்றி உலவுவார்கள் என்று அவ்வளவு நம்பிக்கை . இத்தனை நாட்கள் கண்டு கொள்ளப் படாமேயே விடப் பட்ட நாய்க்கு கூடப் பால் அன்று ..

 

வாய் விட்டுக் கதறி அழுத தருணங்கள் நினைத்துப் பார்க்கையில் பின்னொரு நாள் சிரிப்பை வரவழைக்கின்றன . மனம் விட்டு மகிழ்ந்த தருணங்கள் நினைக்கையில் எல்லாம் வரவழைக்கின்றன கண்ணீரை மௌனமாகக் கண்ணோரம் .

 

அன்று அணியப்பட்டிருந்த அத்தனை ஆடைகளின் நிறங்களும் எப்பொழுது பார்த்தாலும் பிரதிபலிக்கின்றன எல்லா ஒளிச்சிதறல்களின் போதும் நிற மாலைகளில் .அன்று பேசப் பட்ட அத்தனை வார்த்தைகளும் பத்திரமாயிருக்கின்றன ரசித்து எழுதப்பட்ட காதல் கவிதைகளென .

 

15 , என் நினைவில் மறக்க முடியாமல் பதிந்து போன எண் . என்னை நான் கண்டெடுத்த இடத்தின் முகவரி திருச்சி – 15 , முதல் வருடத்தில் என்னைப் பதிவு செய்து கொண்ட எண் 1030015 … எனக்கென அடையாளங்களை உருவாக்கித் தந்தது இரு குழுக்கள் . தமிழ் மன்றமும் , துறை சங்கமும் .. அவர்களும் மொத்தம் 15 பேர் .. இன்னும் ….. கடைசி நாளும் கூட .

 

தேதி பார்க்கும் ஒவ்வொருமுறையும் ஓடிவிட்டதா ஒரு வருடம் என பிரமிக்க வைக்கிறது காலத்தின் வேகம் . இருந்து கூட ஏதோ ஒரு நீண்ட விடுமுறைக்கு விட்டு வந்ததாகவும் , அது முடிந்ததும் மீண்டும் கல்லூரி செல்லப் போகிறோம் என்பது போன்ற எண்ணமே அடி மனதில் பாறை கீழ் உறைந்து போன தண்ணீராய் பதிந்து போய் விழிக்கின்ற ஒவ்வொரு காலையும் , முதல் வகுப்பென்ன என எண்ண வைக்கின்றது ..

 

அது சரி எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும் ,முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும் , மிதிவண்டி பழகி வாங்கி வந்த தழும்பும் , பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும் , முதல் எதிர்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும் , சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும் , எல்லாம் சேர்ந்த கல்லூரி நினைவுகளும் யாருக்குத் தான் மறக்கும் …..