26
Aug

பட்டாம் பூச்சிகள் உலகம்

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

    தேவதைகள் தூக்கிவைத்துக் கொஞ்சி விளையாடும் பட்டாம் பூச்சிகள் உலகம் எனது . நிராசை ,ஏமாற்றம் என்பவைகளுக்கு என்னுலகில் இடமில்லை . இங்கே பெய்யெனப் பெய்யும் மழை . நில்லென நிற்கும் நிலவு .

 

                   பயணங்களில் பாதைகளில் உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் சிறகுகளில் கொஞ்சம் பால்யமும் உறைந்து கிடக்கலாம் .வீதிகளெங்கும் இரண்டாம் சாமங்களின் கனவுகள் உயிர்பெற்று அலைந்து உலவலாம் . நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்களில் தேவதைகள் மோதிச் செல்லலாம்  . தெருமுனை தேநீர்க் கடைகளில் கடவுளர்கள் கதைக்கக் கிடைக்கலாம்  .காதலின் பெயர் சொல்லிச் சகலமும் தொழக் காணலாம். 

 

              ஜன்னல் மோதி வழியும் மழையை தேநீருடன் ரசித்துக் கொண்டிராமல், ஆடை களைந்து  சாலை  இறங்கி மழையை நனைக்க விரும்பும் யாவருக்கும் எப்பொழுதும் திறந்து கிடக்கும் பட்டாம்பூச்சிகள் உலகத்தின் கதவு . மழைப் பேச்சு கேட்க விரும்புவோர் இனி குடை வீசிவிட்டு நடக்கத் தொடங்கலாம் …

 

                                 - ப்ரியமுடன்

                 ரெஜோ

web counter
Provided by hit counter gallery.