Archive for February, 2012

என்ன இருக்கிறது

இருபத்தேழு வயதிற்குப் பின் …

 

எதற்கெடுத்தாலும் எரிச்சல்

சீப்பில் உதிர்ந்தொட்டிக் கொள்ளும்

மயிர் பற்றிய கவலை

மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டாலும்

ஒளிந்துக் கொள்ளத் தெரியாத தொப்பை

இளமையாய் இருந்ததன் நினைவுகள்

நிறைய கழிவிரக்கம் 

போக்குவரத்து நெரிசலும் புகையும்

ஆறிப் போன உணவை விழுங்க

ஒதுக்கப்பட்ட இரண்டு நிமிடங்கள்

நிறைய வியர்வையும் மூச்சிரைப்பும்

 

திருமண அழைப்பிதல் பார்கையில்

வயிற்றைக் கவ்வுகிறது பயம்

எதிர் பார்க்காத தருணத்தில்

எதிர்பார்க்காத இடமொன்றிலிருந்து

வரப் போகும் அழைப்பிதழில்

எதிர்பார்க்காத பெயரொன்று

இருந்துவிடக் கூடும் என்ற அச்சத்திலேயே

கழிகின்றது நாள் மொத்தமும் …

 

மழையும் , குழந்தைகளும்

சுமைகளாய்த் தெரிகிறார்கள்

கவிதைகள் கழுத்தை

நெரிக்கின்றன

புன்னகைக்க மறந்து போய்

மனம்

நேற்றைய சுகமான நினைவுகளிலோ

நாளை பற்றிய அவநம்பிக்கைகளிலோ

மட்டுமே மையம் கொள்கிறது 

 

எல்லாரும் உற்றுப்பார்ப்பது

நெளியச் செய்கிறது

கண்ணுக்குத் தெரியாத பாரமொன்றை

தலையில் ஏற்றி வைத்து ஓடச் சொல்வது

அவர்கள் பழக்கமாயிருக்கிறது

எல்லாவற்றின் காரணமாயும்

நம்மை நோக்கி நீளக் காத்திருக்கும்

சுட்டுவிரல்கள்

துப்பிக் கொண்டே இருக்கின்றன

தோட்டாக்களை …

 

தத்துவங்கள் பிடிக்கின்றன.

கடவுளைப் பழிப்பதும்

கூடவே

கன்னத்தில் போட்டுக் கொள்வதும்

பழகியிருக்கிறது.

 

சமயங்களில்

 

யாருக்கும் தெரிலாமல்

மறைந்து போவதும் 

 

புகைப்படங்களைக்

கிழித்தெறிவதும்

 

உணவிருந்தும் பசித்திருப்பதும்

 

கொஞ்சமேனும் சிரித்துப் பார்ப்பதும்

 

நிறைய அழுவதும்

 

கோபம் கொள்ளப் பழகிக் கொள்வதும்

 

கவிதைகள் எழுதுவதை

நிறுத்திக் கொள்வதும் கூடச்

 

சாலச் சிறந்ததெனத் தோன்றுகிறது.

 

என்ன இருக்கிறது

உறக்கமில்லா இரவின் பின்னே ..

நீண்ட பகலைப் பற்றிய பயத்தினைத்

தவிர …

 

——————————————————————-

Tags:


 

எழுப்ப மறந்து உனக்காகக்

காத்துக் கொண்டிருக்கிறது அலாரம் ..

நீ விழிக்கையில் கூடவே

நடிக்கிறது அதுவும் …

 

நீ தினசரி படிக்கையில் மட்டுமே

தினசரி ஆகிறது

தினசரி.

 

நீ குளித்து முடிப்பதற்குள்

மூன்றாம் உலகப்போரை முடித்திருக்கின்றன

உன் ஆடைகள் ..

வெற்றி பெற்ற ஆடை க்ரீடதிற்குப் பதில்

சூடிக் கொள்கிறது உன்னை ..

 

கண்களை மூடி நீ பிரார்த்தனை செய்கையில்

உனக்குத் தெரியாமல்

பிரார்த்தனையைத் தொடங்கியிருக்கிறார்

கடவுள்

கடவுளின் கடவுளிடம் …

 

நீ பேருந்தில் படிப்பதற்காகவே

பிறப்பெடுத்திருக்கிறார்கள்

அகதா கிறிஸ்டிகளும் , ஸிட்னி ஷெல்டன்களும் ..

சமயங்களின் பயணச் சீட்டின் பின்னே

கவிதை எழுதும் நடத்துனர்களும் …

 

நீ வரும் வழி எங்கும்

வேண்டுமென்றே உனைக் காக்க வைக்கின்றன

போக்குவரத்து விளக்குகள் ..

போக்குவரத்து நெரிசல் மொத்தமும்

உன்னைப் பாடிக் கொண்டிருக்கையில்

பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறாய்

அலைபேசி எப்.எம் – இல்…

எல்லா வாகனங்களும் அபஸ்வரத்தில் கத்திவிட்டு

பெருமூச்சுடன் கிளம்புகின்றன ..

 

வெயிலடிக்கிறதெனக் குடை பிடிக்கிறாய் ..

சுற்றியிருப்பவர்களைச் சுட்டெரிக்கிறது

சூரியன் ..

 

நீ அலுவலகம் நுழைந்ததும்

எல்லா இருக்கைகளுக்கும்

தலை முளைக்கிறது ..

பக்கத்து இருக்கைக்கு மட்டும்

சிறகு முளைக்கிறது .

 

மின்னஞ்சல் அனுப்புகையிலும்

‘கோட்’டிட்டு நிரப்புகையிலும்

பேஸ் புக் படிக்கையிலும்

அரட்டைகள் அடிக்கையிலும்

பார்த்துக் கொண்டே இருக்கிறது ..

அதென்ன கணிப்பொறியா இல்லை

கண்ணாடியா …!

 

மதிய உணவைக் குறைத்து விட்டு

செல்லத் தொப்பையைக் காரணம் சொல்கிறாய்

பூக்கள் கனத்தது எப்பொழுதென

கோபத்தில் மீதம்.

 

மாலைத் தேநீர் உன் கைகளுக்குள்

தீரப் போகும் ஏக்கம்

தேநீருக்கும் மாலைக்கும் …

 

நீ அலுவலகம் விட்டுக் கிளம்புகையில்

எல்லா இருக்கைகளுக்கும்

தலை வெடிக்கிறது  ..

பக்கத்து இருக்கைக்கோ

பைத்தியம் பிடிக்கிறது.

 

நீ வீடு திரும்புகையில் கூடவே

ஓடிவருகிறது நிலவு ..

கதவை மூடிக்கொண்டாலும்

காத்திருக்கத் தொடங்குகிறது உன் ஜன்னல் திறக்க ..

 

நீ எழுதி முடித்ததும்

வார்த்தைகளைக் கலைத்துப் போட்டு

கவிதைகளாக்கி விளையாடித் தீர்க்கிறது

உன் நாட்குறிப்பேடு …

 

நீ கண்கள் மூடிக் கொண்டதும்

இருண்டு போகிறது உலகம்

கனவுன்னைக் காணத் தொடங்குகிறது …

 

——————————————————————

 

Tags: ,