Archive for July, 2010

ஊதா நிறப் பூக்கள்

 

 

எனக்கு முன்பு தடதடத்துச் செல்லும் ரயிலில் கையசைத்தபடி சென்று கொண்டிருக்கும் நண்பனைப் பற்றியோ, சுற்றியிருப்பவர்கள் பற்றிய ப்ரக்ஞை எதுவுமில்லாமல் எனை ஆக்கியபடி யாருக்கும் கேட்காமல் செவி வழி உயிர் துளைத்துக் கொண்டிருக்கும் பாடல் பற்றியோ, அதைத் திருடிப் பார்த்த்துவிடும் காதலுடன் எனது உடல் துளைத்துக் கொண்டிருக்கும் பெங்களுருவின் குளிர் பற்றியோ உனக்குக் கடிதம் எழுதும் எண்ணம் துளியும் இல்லை அந்தப் பெண்ணையும் அவள் நண்பர்களையும் பார்க்கும் வரை.

எப்பொழுதும் எனக்குள்ளேயே இருக்கும் உனக்கான காத்திருப்போடு, எனக்கான  ரயிலுக்காகக் காத்திருக்கும் எண்ணம் மட்டுமே அதுவரையிருந்தது.

என்னையே தேடச் சொல்லித் தந்து கொண்டிருக்கும் இருள் ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்பதால் எனது ரயில் பெட்டியின் இருட்டு என்னை எதுவும் செய்துவிட வில்லை. இருளின் மௌனத்தில் இங்கும் ஒளிந்துகொள்ளலாம் என்ற நிம்மதி மட்டுமே இருந்தது எனது இருக்கைக்குச் செல்லும் வரை.

தன்னைத் தானே எரித்து உருகியபடி காதலின் முதல் பாடம் கற்றுத் தந்த மெழுகுவர்த்தியும் அதன் மஞ்சள் வெளிச்சமும் ரயிலில் புதிதெனக்கு. கைகளில் மெழுகுவர்த்தி பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரத்தில் உறங்கிவிடலாம் என அனுமதி கேட்ட அவளின் நண்பர்களோ, ஊதா நிறப் பூக்களைக் கைகளில் பற்றிய படி தொந்தரவிற்கு மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண்ணோ, அசிரத்தையாய் எனது பயணச் சீட்டில் கிறுக்கிக் கொடுத்த நடத்துனரோ எனது கண்களில் இல்லவே இல்லை அப்பொழுது.

முழுவதுமாய் கண்களை மறைத்துவிட்டிருந்தது எனக்கு அறிமுகமான உன் முதல் பிறந்தநாளின் ஞாபகங்கள்.

என்ன வேண்டும் எனக் கேட்ட என்னிடம், இதே போன்ற மஞ்சள் நிற மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முகம் முழுக்க இனிப்புப் பூசிய புன்னகையுடன்  கேட்டாய் ஊதா நிறப் பூ ஒன்று கிடைக்குமா என்று. கல்லூரி முழுவதும் தேடியும் ஒரு ஊதா நிறப் பூ கூட கிடைக்கவில்லை அன்றெனக்கு. இன்றென் தோட்டம் முழுதும் ஊதா நிறப் பூக்கள். பிறந்த நாட்களும் இருக்கின்றன. வாங்கிக் கொள்ளத்தான் நீயில்லை.

ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என என்னிடம் கேட்டுக் கொண்டு உன் அலைபேசியின் வாழ்த்துகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாய். ஏன் உனக்கு வாழ்த்துச் சொல்லுகிறார்கள் என்றேன். என் பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தாமல் வேறு யாரை வாழ்த்துவதாம் என்றாய். வாழ்த்த வேண்டியது நீ பிறந்த நாளையல்லவா எனச் சிரித்து, நீ எவ்வளவு கேட்டும் அன்று முழுதும் உனக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருந்தேன்.

இப்பொழுதும் கூட உன் அலைபேசி வாழ்த்துகளைக் காதில் பாடியபடி இருக்கலாம். வாழ்த்தச் சொல்லும் ஆசையுடன் எனைக் கொன்று கொண்டிருக்கிறன உன் அலைபேசி எண்கள்.

வாழ்த்துவதற்கு உன் பிறந்தநாள் மட்டுமே என்னுடன் இருக்கிறது இன்று.

——————————————————————–

 

 

Tags:

காதல் தேவதை

 

அது ஒரு காலம். கைகளில் கவிதைகளோ கண்களில் காதலோ இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். எப்படியாவது காதல் தேவதையைச் சந்தித்து ஒரு காதலியை யாசித்து விடும் கனவு மட்டுமே இருந்தது.

 

காதலைத் தேடி நான் வெளியே சென்றுவிட்டிருந்த ஒருநாளின் மாலையில் காதல் தேவதை என்னைத் தேடி வீட்டிற்கு வந்திருந்திருக்கிறாள். எதற்காக என்று தெரியவில்லை கொஞ்ச நேரம் காத்து கூட இருந்திருக்கிறாள். நெடு நேரம் பூட்டிய கதவும், சாவி பிரிந்து மௌனித்திருந்த பூட்டும் அவளுக்குச் சலிப்பைத் தந்திருக்கக் கூடும். மாலை மட்டும் பூக்கும் அந்தப் பூவைக் கிள்ளி நொடியில் உன்னைச் செய்து விட்டு, தான் வந்து போனதன் அடையாளமாய் வாசலில் உன்னையும், வானத்தில் நிலவையும் நிறுத்திப் போயிருந்திருகிறாள்.

 

காதல் தேவதையே கவனித்திருந்திருக்கமட்டாள் வானத்திலும் வாசலிலும் ஒரே அடையாளத்தை விட்டுப் போயிருப்பதை. என் வாசல் வானமாகிவிட்டதா இல்லை வானம் என் வாசலுக்கு வந்துவிட்டதா எனக் குழம்பிப் போய் தான் முதலில் உன்னைப் பார்த்தேன் நான். எனக்கான முதல் கவிதையைச் சந்தித்தது கூட அன்று தான்.

 

மீட்டப்படாத இசைக் குறிப்புகள், சந்தித்துப் பழக்கமில்லை எனக்கு. உன் ஒவ்வொரு அசைவிலும் காற்றில் எழுதப் பட்டுக் கொண்டிருந்த புதிய இசைக் குறிப்புகள் தொல்லை செய்துகொண்டே குழப்பவும் செய்தன என்னை. இருந்தும் பார்த்ததுமே பிடித்துப் போன உன்னை என்ன செய்வதென்று மட்டும் புரியவில்லை.

 

காதல் செய்தேன்.

 

காதல் தேவதை வந்து போன கதையைச் சொன்னாய். அதில் நான் தாமதமாய் வந்ததற்காய் மகிழ்வதற்கான காரணங்கள் நிறைய இருந்தது. ஏன் காதல் தேவதையைக் காக்க வைத்தாய் எனக் கேட்டாய் ? ஒரு வேளை உனக்காக இருக்கலாம் என்ற பதிலே தோன்றியது. காதல் தேவதையைக் காக்க வைக்கலாமா என்றாய் ? ஏன் கூடாதென நீ கேள்வி கேட்ட தொனியின் அழகிற்காகவே பதில் சொல்லத் துணிந்தேன்.

 

உன் ஒவ்வொரு வார்த்தைகளின் பிறப்பிடமும், சென்று முடியும் முகவரியும் புன்னகையாகவே இருக்க வேறென்ன செய்வது நான், சத்தமில்லாமல் ரகசியமாய் ,அவற்றைச் சேகரித்து வைப்பதைத் தவிர.

 

எப்படி உன்னை என் எல்லாம் என்று முடிவு செய்ய முடிந்தது என்ற கேள்விக்கான பதில் இன்றும் என்னிடம் இல்லை. எல்லாமாகவும் தோன்றினாய். எதுவும் இல்லாத ஒன்றாகவும் இருந்தாய். எனினும் எப்பொழுதும் உன்னுடனிருக்க மனம் ப்ரியப்பட்டது.

 

இடியோடு கூடிய மழையோடு முத்தமொன்றையும் நாம் பரிமாறிக் கொண்ட அந்த இரவின் அடுத்த நாளில் தான் நீ காணாமல் போயிருந்தாய். காதல் தேவதை திரும்பி வந்திருந்தாள்.

 

உன்னைப் பற்றிக் கேட்டதற்கு, தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு என்றாள். அவளிடம் எப்படிச் சொல்ல நீ தான் எனது அடையாளம் என்பதை.

 

எதற்காக என்னைத் தேடிக் கொண்டிருந்தாய் எனக் கேட்டு ஓயாமல் பேசியபடி இருக்கும் காதல் தேவதையிடம், அவளைப் போய் விடச் சொல்லி விட்டு, சொல்லிக் கொள்ளாமலே சென்று விட்ட உன்னை இரண்டு அறைகள் தந்து உடனே அனுப்புமாறு கேட்கும் வார்த்தைகள் இதயத்திற்கும் உதடுகளுக்கும் இடையே உழன்று கொண்டிருக்கின்றன.

—————————————————————-

Tags: