தீண்டுமின்பம்

 

 

உன்னிடம் காதலைச் சொல்லப் போகின்ற தருணத்தில் ,அதிகாலைக் கனவொன்றிலிருந்து , வழக்கம் போல மீட்கப்பட்டிருந்தேன் .

 

இன்னும் நான் பார்க்காத அந்த அழகிய கனவு இறங்கியிருந்தது , என் அறை மூலையிலிருந்த விட்டில் பூச்சியுள் . அதன் உறக்கம் கலைக்காமல் கிளம்பிச் சென்றேன் என்னறைக்கு வெளியே , மீண்டுமொரு வழக்கமான நாளுக்குள்ளே.

 

மேகங்கள் இருண்டிருந்த ஏதோ ஒரு பொழுதில் , அறை திரும்பியிருந்தேன்.

 

சாளரங்கள் எல்லாம் திறந்திருந்தும் , வெளிச் சென்றிருக்கவில்லை அந்த விட்டில். முடியவில்லையா , இல்லை முயற்சிக்க வில்லையா என்பதைத் தாண்டி என் கேள்வி , அந்த மீதமிருந்த கனவைப் பற்றியிருந்தது.

 

நேற்றைய இரவு தனக்குள்ளே இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் , நீண்டிருந்த பகல் ஒரே நேரத்தில் பெருங்குளிராகவும் , தகித்துச் சுட்டதாகவும் சொன்னது . என் சிறிய அறைக்குள் ஏதேதோ காட்சிகள் சிதறுண்டு கிடப்பதாகச் சொன்னது. நடக்க மறந்த முடவானாய் , எங்கு ஊர்ந்தும் ஒரே இடத்தைச் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் ,தான் சிக்கியிருக்கும் முடிவில்லா பெரு சூன்ய வெளியிலிருந்து மீட்கச் சொல்லிக் கேட்டது. கனவு பற்றி எதுவும் பேசவேயில்லை.

 

மீண்டும் கனவு என்றேன் .

 

தினமும் இதே கனவைத் தான் காண்கிறாயா என்றது.

 

ஆம் என்று தலையசைத்த என்னைப் பார்த்து ஏதோ தனக்குள் முனங்கிக் கொண்டது .

 

கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தது .

 

மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கும் என்னிடம் , ஒன்று சொல்லட்டுமா என்றது.

 

சொல் எனச் சொல்லி முடிக்கும் முன் , திரியில் ஆடிக் கொண்டிருக்கும் தீயினுள் பாய்ந்திருந்தது .

 

நந்தலாலா.

 

—————————————————————————————————————–

Tags: ,

This entry was posted on Thursday, May 7th, 2009 at 9:57 pm and is filed under காதல் கடிதங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments so far

Bhupesh
 1 

‘ நந்தலாலா’ – நச்! ((‘பட்டாம்பூச்சி விற்பவனுக்கு’ ஏதாவது, எங்காவது விளக்கம் உள்ளதா?)

May 15th, 2009 at 8:30 am
Rejovasan
 2 

நன்றி பூபேஷ் அண்ணா :-)

நா.முத்துக்குமார் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் , எப்பொழுதிருந்து எனத் தெரியவில்லை . நண்பர்களுக்கு வாழ்த்தட்டைகள் தரும் பொழுது பட்டாம்பூச்சி விற்பவனிடம் இருந்து என எழுதிப் பின் அதுவே பழக்கமாகிவிட்டது .

May 15th, 2009 at 10:27 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment