புகையும் நகரொன்றின் கதை
தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள்
முண்டங்களென தொங்கவிடப் பட்டிருக்கின்றன
குருதி சொட்ட
நகரத்தின் நுழைவாயிலில் …
வாலறுந்த நாய்கள் சிலவும்
முகம் சிதைந்த பலரும்
சண்டையிட்டபடி யிருக்கின்றனர்
சிவந்த ப்ரேதங்களுக்காக …
கைவிடப்பட்ட ரகசிய பிரதேசமொன்றில்
முனங்கியபடி பறந்து திரிகின்றது
சர்பங்கள் உண்டு கொண்டிருக்கும் கடைசி பெண்ணின்
வியர்வை யேறிப்போன உள்ளாடை …
ரத்தமூற்றப்பட்ட கோப்பைகள்
யாருக்காகவோ காத்திருக்கின்றன
அனேகமாக எல்லாத் தேநீர் கடைகளிலும் …
அருகிலேயே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது
புகைந்து கொண்டிருக்கும் ஆட்காட்டி விரலொன்று …
நிறமழிந்து போன குருட்டு வண்ணத்துப்பூச்சிகள்
ஒன்றையொன்று முட்டிக்கொண்டு
ஜன்னல்களின் வெளி வந்து விழும்
சிதைந்த கருக்கள் கண்டு
அலறியபடி அலைகின்றன …
யாருமறியாத வெளியில் இருந்து
நகர் முழுவதும் பெய்து கொண்டிருக்கிறன
துர் நாற்றம் கொண்ட சிறகுகள் …
புகையும் நகர் பற்றிக்
கேட்கச் சுவாரசியமான கதைகள்
யாருமில்லாத தெருக்களில்
நிர்வாணமாய் அலைந்திருக்கின்றன..
யாவற்றையும் பார்த்தபடி கேட்டபடி
தெருமுனைக் கட்டணக் கழிப்பறையில்
சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்
கடவுள் .
Tags: burning city, god, god's address, last day, last girl, poem

5 comments so far
Leave a reply