கடந்து மறைகின்ற திருப்பங்களில் எல்லாம்

பிம்பங்களை உதிர்த்த வண்ணம்

என் விரல் பிடித்து வந்துகொண்டிருக்கின்றன

கனவுகள் 

 

 

கையிலிருக்கும் பொம்மைகளை எல்லாம்

தூக்கி  எறிந்து விட்டு

கடைவாயில் எச்சிலொழுக சிரிக்கும்

குழந்தை போல

ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கும்

பிம்பங்களை எல்லாம்

உதறி எறிந்து விட்டு சிரிக்கின்றன கனவுகள்

 

  

பின்

இறந்து போன இறகுகளை

உதிர்த்து விட்டு

சிலிர்த்துக் கொள்ளும்

சாம்பற் பறவைகளைப் போல்

செய்துபார்கின்றன

கண்ணாடி முன் நின்று

 

 

பிம்பங்கள் உதிர உதிர

பக்குவமடைகின்றன கனவுகள்

அல்லது

பக்குவமடைய உதிர்த்துவிடுகின்றன  

பிம்பங்களை .

 

 

கடைசி சந்திப்பில்

நீ பூசியிருந்த வண்ணங்கள்

நிழலின் நிறத்தில்

 

நிலையத்தின் தொலைதூர வளைவில்

புள்ளியாகத் தொலைந்து கொண்டிருக்கும்

புகை வண்டியின்

தலைமேல் பரவிக் கொண்டிருக்கும்

புகைக்குள் உன்னுருவம் 

 

சொற்கள் சிதறிப் போய்

மௌனமாய்

காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றது

உன் குரல்

  

 

அடிக்கொருமுறை

புகைப்படங்க ளெடுத்துப் பார்த்து

நினைவில் நிறுத்திக் கொள்கிறேன்

இப்படித்தான் நீ இருந்தாயென

 

எல்லாப் புகைப்படங்களும் சுழற்சியில்

தொலைந்துபோய்

உன்னை நினைவுறுத்த

எதுவுமே என்னிடம் இல்லாது போகும்

ஒருபொழுதில் உன்னை மறந்திருப்பேன்

Tags:

This entry was posted on Sunday, October 26th, 2008 at 3:01 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

One comment

 1 

Nice site!

September 24th, 2009 at 2:15 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment