கொஞ்ச நாட்களாய் ஏனோ

என் கன்னங்களில்

சிவப்பு பூசிக் கொண்டே தான் எழுகிறது

காலைப் பொழுதுகள் …

————————————————–

நாட்காட்டியில்

தினம் நூறுமுறை

யாரும் பார்த்திடாவண்ணம்

தேதி பார்த்திடும் போது

அச்சமும் கூச்சமும் பின்னிக் கொள்கின்றன

ஒரே அலைவரிசையில் என்னை …

————————————————–

நம் திருமண இரவன்று

உனக்குப் பரிசாகத் தருவதற்காக

வைத்திருக்கிறேன்

ஒரு கோடி ஆசைகள் ….

————————————————–

என் ஒவ்வொரு நொடிகளும்

உதடுகள் துடிப்பது

அதை உச்சரிக்கும் வேளை

எண்ணித்தான் ….

————————————————–

கேட்கிறாயா இப்பொழுதே …

————————————————–

நம் படுக்கை முழுவதும்

பொம்மைகள் வைத்து

விளையாடிட வேண்டும்

சில சமயம் நீ விளையாடிட

பொம்மையாகிட வேண்டும்

நானே ….

————————————————–

கிளி ஒன்று வளர்த்து

“சீய் போடா ” என மரியாதை இல்லாமல்

அழைக்கச் சொல்லித்தர வேண்டும்

நீ வேலைக்குச் சென்று விட்ட

வெறும் பகல் நேரத்தில் …

————————————————–

திடீர் அணைப்புகள்

தினம் தேவை

திருட்டு முத்தங்கள்

தினம் ஒரு முறையாவது …

————————————————–

வெட்கப்படுவது எப்படி என்று

கற்றுத்தந்திட வேண்டும்

நீ எனக்கு …

கவலைப்படாதே

நிச்சயம் உண்டு குருதட்சணை…

————————————————–

மின்சாரம் நமக்கெதற்கு

தொலைத்துவிட்டு

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்

உன் முகம் பார்த்திட வேண்டும்

விடியும் வரை …

————————————————–

உன் ஆடை புகுந்து கொண்டு

பெரிதாகச் சட்டை தைத்த

தையல்காரனைத் திட்டவேண்டும் …

————————————————–

தினம் குளிக்கச் செல்லும் போது

மறந்து போகவேண்டும்

தூவாலை எடுத்துச் செல்ல நீ …

உன் தலை துவட்டவே

துவைத்து வைத்திருக்கிறேன்

என் சேலைகளை …

————————————————–

நீ கண்டுபிடித்துக் கட்டியணைக்கவே

கதவின் பின் ஒளிந்து

விளையாடியதில்லை

சிறு வயதில் …

————————————————–

என் சமையலை

ரசித்துன்னும் வேளையில்

மிளகாய் கடிக்க நேர்ந்தால்

தண்ணீர் வேண்டாம்

என்னிடம் முத்தங்கள் உண்டு …

————————————————–

நாமிடும் சண்டையில்

நானழ நேர்ந்தால்

கவலை கொள்ள வேண்டாம்

அது உன் ஆறுதலுக்கான

அழைப்பு தான் …

————————————————–

கடலலை பார்த்துக் கொண்டே

உன் கரங்களை

இறுகப் பற்றிக் கொண்டு

தோள் சாய்ந்து அழுக்காக்கிட வேண்டும்

உன் சட்டையை ….

————————————————–

நான் கவனித்துக் கொள்ளவே

உடல் நிலை சரியில்லாமல்

நடிக்க வேண்டும் …

————————————————–

அடிக்கடி தொலைபேசியில்

குரல்மற்றிப் பேசி என்னை

ஏமாற்றிட வேண்டும் …

————————————————–

உன் காதோரம் நான் கூறிடும்

ரகசியக் கோரிக்கைகளை

கேள்வியில்லாமல் நிறைவேற்றிடவேண்டும் …

————————————————–

தினமும் தாமதமாக

வந்ததற்கு

நீ கூறிடும் பொய்களை

கோபத்தோடு ரசிக்க வேண்டும் …

————————————————–

இரவினில் நீ பேசிய

வார்த்தைகள் கொண்டு

பகலினில் நூறு கவிதைகள்

எழுதிட வேண்டும்

நான் …

————————————————–

மழைகாலத்தில்

குடைதந்தனுப்பினால்

கோபம் கொள்ள வேண்டாம்

நீ வீடு திரும்பியதும்

சேர்ந்தே செல்வோம்

மழை வாங்கி வருவதற்கு …

————————————————–

என் சமையல் வேலைகளுக்கிடையே

நீ தொல்லைகள் செய்யும் போது

கோபம் கொண்டு ‘போ ‘ என்றால்

போய்விடாதே உடனே …

காய்கறிகள் பற்றிக் கவலை கிடையாது எனக்கு …

————————————————–

மீண்டுமொருமுறை

உன்னைக் குழந்தையாக்கி

வளர்த்திட வேண்டும் …

————————————————–

தெரிந்து கொஞ்சம்

தெரியாமல் கொஞ்சம்

திருடிக்கொள் முழுவதும்

உன்வசம் என்னை

————————————————–

குளிர்காலத்தில்

நீ எனக்குள்

நெருப்பாகிட வேண்டும்

வெயில் காலத்தில்

நான் உந்தன் மழையாகிட வேண்டும் …

————————————————–

அடம் பிடித்து மண்ணில்

புரள்வாயா கொஞ்சம்

என் மடியில் போட்டு

உன்னைக் கொஞ்சக் கொஞ்சம் …

————————————————–

என்றும் உன் மார்பில்

முகம் புதைத்துக் கொண்டு

பார்த்திட வேண்டும்

ஆயிரம் பௌர்ணமி இரவுகள் …

————————————————–

மீதமுள்ள என்னாசைகள்

உனக்கானவைகள்

அப்படியே தந்து விடு என்னிடம்

அதற்காகவே காத்திருக்கிறேன்

காலங்களோடு …

————————————————–

Tags:

This entry was posted on Tuesday, October 21st, 2008 at 8:45 am and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments so far

அனுஜன்யா
 1 

ஆள விடுங்க. அம்புட்டுக் காதலா! ஒரு பொதுக்கூட்டமே இருக்கு இந்தக் கவிதைகளுக்கு. ஸ்ரீமதி, சரவணகுமார், காந்தி, இனியவள் புனித, நாணல் என்று பெரிய்ய்ய்ய்ய பட்டியல்.

அனுஜன்யா

October 23rd, 2008 at 11:24 am
Rejovasan
 2 

காதல் கவிதைகள் எப்பொழுதுமே என் சாய்ஸ் அல்ல . எப்பொழுதாவது சில அடையாளங்களையோ , நினைவுகளையோ சந்திக்க நேர்கையில் தானாக வந்து விடுவது ..
நீங்கள் சொன்ன பட்டியலை நிச்சயம் படித்துப் பார்க்கப் போகிறேன் . நானும் அவங்களோட சேர்ந்துட்டேன் ..:-)

October 23rd, 2008 at 11:45 am
கார்த்திக்
 3 

மிகவும் அருமை.உங்கள் கவிதையில் இருந்து சில ஆசைகளை திருடியிருகிறேன் மன்னிக்கவும் :)

January 13th, 2009 at 2:56 pm
Rejovasan
 4 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக் :-) . எனது ஆசைகளே சில கனவுகளில் இருந்து திருடப்பட்டவைகள் தான் .

January 13th, 2009 at 8:00 pm
Revathi
 5 

//மழைகாலத்தில்
குடைதந்தனுப்பினால்
கோபம் கொள்ள வேண்டாம்
நீ வீடு திரும்பியதும்
சேர்ந்தே செல்வோம்
மழை வாங்கி வருவதற்கு …//

இந்த வரிகளுக்காக சத்தமா ஒரு விசில் அடிக்கலாம் :) சூப்பர் :)

May 24th, 2009 at 8:31 pm
Rejovasan
 6 

விசில் அடிக்கற ஆளா நீ !!! :-)

May 24th, 2009 at 10:41 pm
Revathi
 7 

//விசில் அடிக்கற ஆளா நீ !!! //
இப்படியெல்லாம் insult பண்ணினா ,ஆயிரம் பௌர்ணமி இரவுகள் …உனக்கு எப்பவும் கனவுல தான்னு சாபம் விட்டுருவேன்… :-Z

May 24th, 2009 at 11:58 pm
Rejovasan
 8 

சாபமா ???

கவிதைகளை இன்னும் கொஞ்சம் ஊன்றிப் பார்த்தால் அது ஒரு பெண்ணுடைய கனவுகள் என்பது தெரியும் . சபித்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை . பாவம் நான் கனவுகள் திருடிய அந்தப் பெண் தான் .

ஆனாலும் இவ்ளோ கொலைவெறி கூடாது. ;-)

May 25th, 2009 at 9:13 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment