புலம் பெயர்தல்
கூடுகட்ட மரங்களற்று
குறைந்த பட்சம் புகை போக்கிகளும் காணாமல்
டிஷ் ஆண்டெனாக்கள் தேடி
நகர் நோக்கிப் பறந்தபடி இருக்கின்றன
காகங்கள்
கதை சொல்ல யாருமின்றி
உருக்குலைந்து திண்ணைகளோரம்
மூப்பேறிய குறு உரல்களில்
பாக்குடன் சேர்த்து
பழசையும் இடித்தபடி
வானம் பார்த்துக் கிடக்கின்றனர்
கதை சொல்லிப் பாட்டிகள்
பண்டிகைகள் மொத்தமும்
பெட்டிகளுக்குள் அடைக்கப் பட்டுவிட
காத்திருக்கிறார் அய்யனாரும்
மண் குதிரை பறப்பதற்காய்
உறைகளிலிட்டுப் பால் விற்க
பண்ணைக்குச் சென்று விட்ட
மாடுகளின் பின்னே
சமையல் எரிவாயுவாய்
வாசல் தாண்டி
வீடு புகுந்து விட்டிருக்கின்றன
சாணக் கோலங்கள்
வெகுகாலமாய் புற்கள் மட்டுமே
பார்த்துக் கிடந்த புன்செய்கள்
பெருமூச்சோடு சம்மதிக்கின்றன
தலையாட்டி
வீட்டு மனையென்று
பெயர் மாற்றிக் கொள்ள
எல்லாம் வெளியேறிவிட்ட பின்னும்
ஏறி விளையாடிய மரங்கள் உதிர்ந்தும் கூட
கிராமங்களின் தெருக்களில்
தீராத இச்சையோடு
அலைந்து கொண்டிருக்கின்றது
வெயில் மட்டும் – தன்
தீநாக்குகளைச் சப்புக் கொட்டிச்
சுழற்றிய படி…
Tags: ஆதலினால் கவிதை ...

8 comments so far
Leave a reply