ஓடிவிட்ட பல மாதங்களுக்குப் பின்னே
இருளின் நிழல் படிந்த
நகரின் முக்கியமில்லாத
ஏதோ ஒரு தெருவில்
சாலையின் எதிர்ப்புறத்தில்
அவளைச் சந்திக்க நேர்ந்தது
அல்லது அது அவளையொத்த
அடையாளங்களாகவும் இருக்கலாம்
கரைந்துக் கொண்டிருக்கும்
அந்நிழலைப் பார்த்திருந்த
அந்தப் பத்து வினாடிகளில்
காலத்தின் கொடிய கூர்
பற்சக்கரங்கள் போதியமட்டு மென்னை
நசுக்கி முடித்திருந்தன
வலி தாங்க மாட்டாமல்
தலை குனிந்து மீண்ட சமயத்தில்
மறுபடியும் காணாமல் போயிருந்தாள்
விரும்பி ஏற்றுக்கொண்ட
வெறுமை அப்பிய என் முகம் பார்த்து
ஜன்னலோரப் பேருந்திலிருந்து
கை காட்டிச் சிரித்தபடிச் செல்கிறது
சீருடை யணிந்த ஒரு குழந்தை
பதிலுக்குக் கைகாட்டிப் புன்னகைக்கிறேன்
நானும்
என்றேனும் ஒரு நாள்
நகரத்தின் ஏதோ ஒரு பக்கத்தில்
மீண்டும் உன்னைச் சந்திக்க நேரும்
அந்தப் பத்து வினாடிகள் வரும் வரை
என் நினைவுகளை விட்டு விலகி
இருப்பாயாக …
Tags: ஆதலினால் கவிதை ...

4 comments so far
Leave a reply