Archive for August, 2008

பாவம் என் வீட்டுக் கண்ணாடி.

 

ஏய்..

 

என்ன ?

 

ஒன்று சொல்ல வேண்டும்

உன்னிடம் .

 

என்ன சொல்லிவிடப் போகிறாய்

புதிதாக …

 

இல்லை இது புதிது தான்.

 

உண்மையாகவேவா

 

ஆம்

 

ஏமாற்றிவிடமாட்டாயே

சென்றமுறை போல் .

 

மாட்டேன் .

 

………………………………

 

கண்ணாடி மேல் சத்தியம் .

 

சரி சொல் .

 

தூக்கம் துரத்தும் அதிகாலை வேளையில்

எழுந்து ஓடத்துவங்குகிறேன் நான் …

 

எங்கே ???

 

தெரியாது .

 

எழுந்ததும் எதற்கோ கொஞ்சம்

பல்லைக் காட்ட வேண்டும்

 

எதாவது செய் - சில வினாடிகளாவது

சொட்ட வேண்டும் தலையில் தண்ணீர் ..

 

ஏன்  ???

 

தெரியாது .

 

பின் கண்ணாடியில்

கண்டுபிடிக்க வேண்டும்

என் பிம்பத்தை …

 

பாவம் என் வீட்டுக் கண்ணாடி

என் பிம்பம் பார்த்தே

கண் மங்கிப் போனது …

 

எத்தனை முறை சொல்வாய்

இதையே

தெரியுமெனக்கு ஏமாற்றுகிறாய்

நீயென்னை..

 

இனிமேல் தான் புதிது  .

Read the rest of this entry »

Tags:

30
Aug

15

   Posted by: Rejovasan   in சுவடுகள்

மே 15 ,2007.

மறக்க முடியாத நாள் .

கடைசி தேர்வெழுதிய நாள் . கல்லூரி வாழ்வின் கடைசி நாள் .

 

அதன் பின் எவ்வோளவோ காட்சிகள் கண்கள் கண்டிருப்பினும் ,கல்லூரி நினைவுகளில் கண்மூடுகையில் எல்லாம் கண்முன்னே விரிகிறது அந்த நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும் .

 

அதன் பின் எவ்வோளவோ ஒலிகளைக் கேட்டிருப்பினும் , இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும் , காகிதங்கள் திருப்பும் சர சரப்பும் , மின் விசிறிகளின் சுழல் சத்தமும் , இதயம் போலவே விட்டு விட்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு குழல் விளக்கின் முணு முணுப்பும் …..

 

எப்பொழுதும் அதிசீக்கிரம் தேர்வறை விட்டு ஓடும் பழக்கம் மறந்து போய் , நடக்க மறந்து போன முடவன் போல இருக்கையில் ஒட்டிக் கொண்டு , அதன் வேகத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் நின்று விடக் கூடாதா என்ற வலி மனதெங்கும் .. சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையின் கடைசி பக்கக்கங்கள் நெருங்கிவிட்டது என்னும் பர பரப்பை மீறிய வேதனை ..

 

எத்தனையோ பேரை பார்த்த நிதானத்தில் , இயல்பாகத் தான் இருந்தது கல்லூரி ..

 

இயல்பு மீறி கல்லூரி முதல் நாள் அணிந்த சட்டையை தேடி அணிந்து , எழுதுபகரணங்கள் சகிதம் வந்து , தேர்வு நேரம் முடிந்த பின்னும் எழுந்து போக மனமின்றி , ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , முதல் நாள் பள்ளி செல்ல அடம் பிடித்து மறுத்த அதே மனம் கடைசி நாள் கல்லூரி விட்டு செல்ல ….

 

அதே குழந்தை மனம் .. எல்லார் முன்னும் அழ வெட்கமில்லை அதற்கு .. நாற்காலியில் பெயர் கிறுக்குவது அநாகரீகம் என்று படவில்லை … அடுத்த வெள்ளையடிப்பில் நிச்சயம் மறைந்து போகும் எனத் தெரிந்தும் சுவர்களில் பெயர் கிறுக்க மறக்கவில்லை ..அத்தனை பேரையும் கையெழுத்தில் அடக்கிவிட முயலும் எண்ணம் முட்டாள் தனமில்லை அதற்கு … வருடுகையில் உயிர் பெற்று நம்மை சுற்றி உலவுவார்கள் என்று அவ்வளவு நம்பிக்கை . இத்தனை நாட்கள் கண்டு கொள்ளப் படாமேயே விடப் பட்ட நாய்க்கு கூடப் பால் அன்று ..

 

வாய் விட்டுக் கதறி அழுத தருணங்கள் நினைத்துப் பார்க்கையில் பின்னொரு நாள் சிரிப்பை வரவழைக்கின்றன . மனம் விட்டு மகிழ்ந்த தருணங்கள் நினைக்கையில் எல்லாம் வரவழைக்கின்றன கண்ணீரை மௌனமாகக் கண்ணோரம் .

 

அன்று அணியப்பட்டிருந்த அத்தனை ஆடைகளின் நிறங்களும் எப்பொழுது பார்த்தாலும் பிரதிபலிக்கின்றன எல்லா ஒளிச்சிதறல்களின் போதும் நிற மாலைகளில் .அன்று பேசப் பட்ட அத்தனை வார்த்தைகளும் பத்திரமாயிருக்கின்றன ரசித்து எழுதப்பட்ட காதல் கவிதைகளென .

 

15 , என் நினைவில் மறக்க முடியாமல் பதிந்து போன எண் . என்னை நான் கண்டெடுத்த இடத்தின் முகவரி திருச்சி - 15 , முதல் வருடத்தில் என்னைப் பதிவு செய்து கொண்ட எண் 1030015 … எனக்கென அடையாளங்களை உருவாக்கித் தந்தது இரு குழுக்கள் . தமிழ் மன்றமும் , துறை சங்கமும் .. அவர்களும் மொத்தம் 15 பேர் .. இன்னும் ….. கடைசி நாளும் கூட .

 

தேதி பார்க்கும் ஒவ்வொருமுறையும் ஓடிவிட்டதா ஒரு வருடம் என பிரமிக்க வைக்கிறது காலத்தின் வேகம் . இருந்து கூட ஏதோ ஒரு நீண்ட விடுமுறைக்கு விட்டு வந்ததாகவும் , அது முடிந்ததும் மீண்டும் கல்லூரி செல்லப் போகிறோம் என்பது போன்ற எண்ணமே அடி மனதில் பாறை கீழ் உறைந்து போன தண்ணீராய் பதிந்து போய் விழிக்கின்ற ஒவ்வொரு காலையும் , முதல் வகுப்பென்ன என எண்ண வைக்கின்றது ..

 

அது சரி எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும் ,முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும் , மிதிவண்டி பழகி வாங்கி வந்த தழும்பும் , பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும் , முதல் எதிர்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும் , சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும் , எல்லாம் சேர்ந்த கல்லூரி நினைவுகளும் யாருக்குத் தான் மறக்கும் …..

Tags:

 

சர்வம் 1

சர்வம் 1

அபூர்வாவை ஒருமுறை பார்த்தவர்களால் நிச்சயமாய் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது . சாதாரணமாக வெறும் அழகென்று மட்டும் அதைச் சொல்லி விட முடியாது .நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன் . ஆனால் இவள் கொஞ்சம் அபூர்வமானவள் பெயரைப் போலவே .இவ்வளவு நிச்சயமாக நான் சொல்வதற்கு காரணமில்லாமல் இல்லை . அவள் வீணையைக் கையிலெடுத்த பொழுது தரகர் சத்தமாக காபியை உறிந்தது வரை நியாபகமிருக்கிறது . “எங்கயும் ஓடிட மாட்டா .. இப்போவே பார்த்து தீர்த்திடாத .. கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி என்ன பண்றதுன்னு யோசனை வந்திடும் ” என்று பெரியம்மா என் விலாவில் இடிக்கும் வரை அவளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை .எல்லாரும் சிரித்தார்கள் என்றாலும் அபூர்வாவின் மௌனப் புன்னகை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது என் கண்களில் .

காபி தம்ளரை வாங்குகையில் வேண்டுமென்றே அவள் விரல் தொட்ட ஸ்பரிசம் தான் என்னுள் எழுகிறது ஒவ்வொருமுறை அவளைத் தொடும் போதும் . பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகிறாள் .

Read the rest of this entry »

Tags:

ஓடிவிட்ட பல மாதங்களுக்குப் பின்னே

இருளின் நிழல் படிந்த

நகரின் முக்கியமில்லாத

ஏதோ ஒரு தெருவில்

சாலையின் எதிர்ப்புறத்தில்

அவளைச் சந்திக்க நேர்ந்தது

அல்லது அது அவளையொத்த

அடையாளங்களாகவும் இருக்கலாம்

கரைந்துக் கொண்டிருக்கும்

அந்நிழலைப் பார்த்திருந்த

அந்தப் பத்து வினாடிகளில்

காலத்தின் கொடிய கூர்

பற்சக்கரங்கள் போதியமட்டு மென்னை

நசுக்கி முடித்திருந்தன

வலி தாங்க மாட்டாமல்

தலை குனிந்து மீண்ட சமயத்தில்

மறுபடியும் காணாமல் போயிருந்தாள்

விரும்பி ஏற்றுக்கொண்ட

வெறுமை அப்பிய என் முகம் பார்த்து

ஜன்னலோரப் பேருந்திலிருந்து

கை காட்டிச் சிரித்தபடிச் செல்கிறது

சீருடை யணிந்த ஒரு குழந்தை

பதிலுக்குக் கைகாட்டிப் புன்னகைக்கிறேன்

நானும்

என்றேனும் ஒரு நாள்

நகரத்தின் ஏதோ ஒரு பக்கத்தில்

மீண்டும் உன்னைச் சந்திக்க நேரும்

அந்தப் பத்து வினாடிகள் வரும் வரை

என் நினைவுகளை விட்டு விலகி

இருப்பாயாக

Tags: