ஒன்பது மாத சொச்சம்

விடாது பெய்திருந்த மழையின்

மறுநாளில் கண்டெடுத்திருந்தார்கள்

அந்தக் களிமண்ணை …

 

எத்தனை முறை வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும்

எதற்கு வேண்டுமானாலும்

எதற்குள் வேண்டுமானாலும்

மாற்றிக்கொள்ள

மாறிக்கொள்ள முடிந்திருந்தால்

ஊரில் எல்லாருக்கும் அதைப் பிடித்திருந்தது …

 

தண்ணீரைப் போல என்றாலும் – அது

தண்ணீரல்ல களிமண் என

மறந்து போனார்கள் …

 

அதைக் கண்டெடுத்த குயவன்

அவன் பழக்கப்படி பானையாக்கலாம் என்றான் …

 

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதுதான் சரி என்றார்கள் …

 

ஊரின் உபாத்தியாயர்

அ னா ஆ வன்னா சொல்லிக்கொடுத்து

வேலைப்பாடுகள் கொண்ட கூஜா ஆக்கினால்

பட்டணத்திற்கு விற்கலாம் என்றார் ..

 

பக்கத்து வீட்டுக்காரகள் அதுதான் சரி என

பிரம்பெடுத்துத் தந்தார்கள் …

 

அந்தத் தெருவின் சாயமிடுபவன்

நிறப்பூச்சுப்பூச்சு செய்தால்

வெளிநாட்டில் மவுசு என்றான் …

 

பக்கத்து வீட்டுக்கார்கள் அது தான் சரி என

அதற்கு முன் விலைபோன

உறவினர்களின் பானைகள் பற்றிய கதைகளை

விடியும் வரை பேசியிருந்தனர் …

 

யார் விருப்பப்படியும் மாறிக்கொண்டே

இருக்க முடிந்ததால்

எதுவாகவும் ஆகமுடியவில்லை களிமண்ணால் …

களிமண்ணாகவே இருந்தது

கடைசி வரைக்கும் …

 

களைத்துப் போன எல்லாரும்

அதை என்ன செய்வதென்று தெரியாமல்

குப்பைத்தொட்டியில் போட முடிவு செய்தனர் ..

 

எல்லாரும் உறங்கிய நள்ளிரவில் ரகசியமாய்

பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ..

ஒரு முறையாவது வாய் திறந்து

அதற்கு என்ன வேண்டுமென பேசியிருந்தால்

அது களிமண்ணாகவே இல்லாமல்

இருந்திருக்கக் கூடுமென ….

 

—————————————————————————————-

Tags: ,

எப்பொழுதும் மழைக்காலம் …

சில கதைகளை ஆரம்பிக்கும் உரிமை மட்டுமே எழுதுபவனுக்கு இருக்கிறது. பின் கதை தன் போக்கில் எழுதுபவனையும் , காலத்தையும் நகர்த்திக் கொண்டு போய் விடுகிறது. தனக்கே தனக்காக எழுதும் பொழுது மட்டுமே இது சாத்தியம். இந்தக் கதை எழுதி முடிக்க மூணரை வருடங்கள் அதிகமா என்றெல்லாம் தெரியவில்லை. இந்த கதை என் மனதிற்கு நெருக்கமானது என்பது மட்டும் உண்மை. இந்த பயணம் எனக்குப் பிடித்திருக்கிறது.

மற்றபடி இந்த கதைக்கான கரு எப்படித் தோன்றியது , இதை எப்படிப் படிக்க வேண்டும் , எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோனார் தெளிவுரை போட்டு திட்டு வாங்க விருப்பம் இல்லை :-)

படித்து விட்டு சொல்லுங்கள் ….

 

பிரிதல்

ஊடல்

கூடல்

இரங்கல்

இருத்தல்    

 

—————————————————————————-

Tags: , , ,

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.

நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன்.  ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.

அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன.  அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.

காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது.  பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது.  சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.

அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத்  தயங்காமல் இருந்தாள்.

மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள்,  கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட  தீண்டல்கள்.

காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது.  இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.

அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன். Read the rest of this entry »

Tags: , , , ,

சந்தியா காம்

தொலைதூரம் வந்துவிட்டேன். உன் நினைவுகளால் இனியும் என்னைத் துரத்த முடியாது.

அவதானிக்க முடியாத முகமூடி ஒன்றில் ஒளிந்திருக்கிறேன். இம்முறை உன்னால் என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது.

நான் வேறொரு பெயரிலிருக்கிறேன் . இருளில் இருந்து நீ பாடும் பாடல்கள் இனிமேல் என் முகவரி வந்தடையாது.

என் நாட்குறிப்பேடுகளை எரித்துவிட்டேன். உன் புகைப்படங்களைத் துரத்திவிட்டேன். கவிதைகளை அறவே தொடுவதில்லை. எப்படி வருவாய் என்னைச் சந்திக்க என் கனவில்?

மீண்டும் எழுத அமர்கிறேன். சாபம் கொண்ட வார்த்தைகள் உன்னை நோக்கியே பயணிக்கின்றன. தூரமும் , முகமூடியும் , முகவரி தொலைத்த என் புதுப்பெயரும் உன்னில் இருந்து தப்புவிக்க முடியாதென சப்தமில்லாமல் சிரிக்கிறது , எப்பொழுதும் என்னைப் பின்தொடர்ந்திருக்கும் உன் நிழல். எரிந்து போன நாட்குறிப்புகளின் சாம்பல், அறை முழுதும் நினைவுகளாய் பொழிகின்றன.

எப்பொழுதும் கதை எழுதும் என்னை , இம்முறை கதை எழுதுகின்றதோ என்ற ஐயத்துடன் புரண்டு கொண்டிருக்கிறேன் சந்தியா காலத்திற்குள்.

—————————————————————————-

 

 

Tags: ,

நெய்தல்  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

 

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . சாலைகளை நனைக்கும் முன்பே  பாதியைப் பிடித்து  வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் , தான் நனைந்தது போக மீதியை,  சொட்டுச் சொட்டாக வீட்டிற்குள் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தன அந்தச் சிவந்த ஓடுகள் .  தரை முழுவதும் வழி தேடிப் பரவி , வாயில் காண முடியாமல் , மண்ணைச்  சேர முடியாமல் மேலும் அழுது வீடு முழுவதும் ஈரம் பூக்கச் செய்து கொண்டிருந்தது துயரம் கொண்ட மழை . வயோதிகர்கள் என்பதாலேயோ என்னவோ அவர்கள் இருந்த படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவேயில்லை மழை, மேலிருந்து  கீழாகவோ இல்லை கீழிருந்தும் கீழாகவோ . குளிராலேயோ மெத்தைப் பஞ்சின் கனத்தாலேயோ  மெலிதாகக் கால்கள் ஆடிக்கொண்டிருந்த கட்டிலில் , கழுத்தின் மேற்பகுதி மட்டும் தெரியும் வண்ணம் கம்பளிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள் அவள் .

 

முகத்தின் சுருக்கங்கள் வழி மெல்லப் புகுந்து அவள் சருமத்தை மேலும் உலர வைத்துக் கொண்டிருந்தது குளிர் . மூடியிருந்த இமைகளின் கீழ் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தன அவள் விழிகள் . சருகு போர்த்தியிருந்த உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன . ஒருமுறை இருமினாள் .

 

                 ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தவன் இருமல் சத்தம் கேட்டு , மீதி ஓவியத்தை தூரிகையிலேயே விட்டு அதை வண்ணங்களில் மூழ்கடித்து விட்டு அவள் அருகில் வந்தமர்ந்தான் . நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் . முன்பை விட அதிகம் சுடுவதாய்ச் சொன்னதவன் உள்ளங்கை . கம்பளிக்குள் தேடி அவள் கைகளை எடுத்து தன்னிரு உள்ளங்கை உள்ளடக்கிய இடைவெளிகள் மொத்தமும் நிரப்பிக் கொண்டான் .

 

மிகவும் பிரயாசைப் பட்டு இதழ்கள் பிரித்து , ” இப்பொழுது கூட ஓவியமா ” என்றாள் .

 

எதுவும் பேசாமல் மௌனமாகப் புன்னகைத்தான் .

 

ஓவியம் காணும் ஆர்வம் கொண்டு படுக்கையிலிருந்து எழ முயன்றவள் , முடியாமல் போகவே பெருமூச்சோடு மீண்டும் படுக்கையில் சரிந்தாள் . அவள் மனம் புரிந்து கொண்டவனாய் ஓடிச் சென்று பாதி வரைந்திருந்த ஓவியத்தை பலகையோடு தூக்க முயன்று முடியாமல் வரைதாளை மட்டும் கிழித்துக் கொண்டு வந்தான் .

 

வண்ணத்துப் பூச்சிகள் வான் முழுவது நிறங்கள் சிந்திக் கொண்டிருக்க ,  உடல் தொட்டிருக்கும் பரவசத்தில் ஆடைகள் நெகிழ்ந்து  காற்றில் பறந்திருக்க , ஒரு கையில் புல்லாங்குழலுடன் மிதந்து கொண்டிருந்தாள் தேவதை ஒருத்தி . ஒரு சிறகு  பாதி மட்டுமே முளைத்திருந்தது . வாசமில்லா பல நீல நிறப் பூக்கள் ஏங்கிய படியிருந்தன அவள் இன்னொரு கை பார்த்து . தேவதையின் முகம் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவள் இதழ்களைக் கவின் செய்தாள். Read the rest of this entry »

Tags: , ,

குறிஞ்சி – கூடலும் கூடல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . நனைந்திருந்த வீதிகளை ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டே கவிதை எழுதிக் கொண்டிருந்தான் அவன் . மெல்லிய காற்று ஜன்னல் கம்பிகளை புல்லாங்குழல் என நினைத்து ஊத முயன்று கொண்டிருந்தது . முகத்தில் மோதிய குளிர் காற்றை அனுபவித்து ரசித்தபடி அதைக் காகிதத்தில் வரைந்து கொண்டிருந்தான் . பின்னாலிருந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு சாய்ந்தாள் அவள் . அவன் எதிர்பார்த்திருந்த தருணம் , நிகழ்ந்திருந்தது எதிர் பாராத தருணத்தில் . சாரலில் இருந்து தப்பித்திருந்த காகிதகங்களை நனைத்துக் கொண்டிருந்தாள் தன்னை நனைத்திருந்த மழையைக் கொண்டு, அவனையும் சேர்த்து .

“தீர்ந்ததென் சந்தேகம் ” சொல்லிக் கொண்டே அவளை முன்னிழுத்து தன் மடியில் வீழ்த்தினான் . கிளையில் கட்டப் பட்ட தாயின் சேலையென அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் உடைகள் , அதிலாடும் குழந்தையென அவள் .

தொட்டில் குனிந்து முத்தமிட எத்தனிக்கும் தாயின் கிட்டத்தில் அவன் .

“என்ன கண்டு பிடித்தீர்கள் புதிதாக என்னிடம் இப்பொழுது “

” மழையில் நனையுமா நிலவு என்ற பழைய சந்தேகம் தான் . என்ன செய்யப் போகிறேன் சொட்டச் சொட்ட என் மடியில் பதிலோடு வந்து நிலவு விழுந்து கிடக்கிறதே இப்பொழுது .. “

Read the rest of this entry »

Tags:

மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் மொத்தமாக நனைந்திருந்தன. நகரோடு சேர்ந்து நனைந்திருந்த நதி குளித்து முடித்த பெண் கூந்தல் துவட்டும் சத்ததுடனும் , வாசனையுடனும் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. நதியொட்டியிருந்த கரையும், கரை தொட்டிருந்த மரமும் அவளுடன் நிறையப் பேச விரும்புவதாய் தெரிந்தது. அடிக்கொருமுறை கரைத்திட்டில் மோதி சில நீர்த் துளிகளை அனுப்பி அவளைத் தொட்டுப்பார்த்து வரச் செய்து கொண்டிருந்தது நதி.

மஞ்சள் நிறப் பூக்களையும், கடன் வாங்கியிருந்த மழையையும் ஒரு சேரத் தூவி அர்ச்சித்துக் கொண்டிருந்தது அவள் அழகை வெகுகாலமாய் சாப விமோசனம் தேடி அங்கேயே நின்று கொண்டிருக்கும் மரம்.சில்லென்ற காற்று முடிந்த மட்டும் அவளை முட்டி மோதி குறைந்த பட்சம் அவள் ஆடையையாவது திருடிக் கொண்டு சென்று விட முயன்று கொண்டிருந்தது. அவள் ரணம் மொத்தத்தையும் குரலில் ஏற்றிக் கூவிக் கொண்டிருந்தது தூர தேசம் தாண்டி வந்திருந்த ஏதோ பறவை ஒன்று. அவள் கண்களின் கீழும் மழை பெய்தாயா என ஓவ்வொரு மேகங்களும் மாற்றி மாற்றி மின்னல்களில் சமிக்ஞை பரிமாறிக் கொண்டன.

எந்த அரவமும் ஏற்படுத்தாமல் வந்து நின்றிருந்தான் அவன். பின்னால் இருந்து பார்க்க அந்த மாலை நேர நதி மரங் காற்று பறவையுடன் அவளும் ஓர் ஓவியம் ஆகிவிட்டதைப் போலவே உணர்ந்தான். சிலர் மட்டுமே அழுகையில் கூட அழகாகத் தெரிகிறார்கள் மழை நின்று போன வானம் போல. அவள் கண்ணீரைத் துடைக்கும் முன் அந்த அழகைக் கூட ரசிக்கத் தோன்றியது அவனுக்கு.

அவள் முன்னே செல்ல தைரியம் இல்லாதவனாய் மரத்தின் பின் சாய்ந்து ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டான். பிரபஞ்சம் மொத்தமும் அவள் சுவாசமே நிறைந்திருப்பதாய் தோன்றியது.

ஒரு முறை பக்கவாட்டில் பார்த்த அவள் கண்கள் மீண்டும் கடல் பக்கம் நிலை குத்தியது. அவன் இருப்பை உணர்ந்தது போலவே இருந்தது அவள் தோரணை.

Read the rest of this entry »

Tags:

பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் மொத்தமாக நனைந்திருந்தன. இன்னும் கொஞ்சம் நனைக்க அந்த தேவாலயத்தின் கண்ணாடிப் பரப்பெங்கும் நுழைவாயிலின் உச்சியில் இருந்து வழிந்து கொண்டிருந்த நீர் முயன்று கொண்டிருந்தது.

கால்கள் இல்லாத ஒருவன் அந்த தேவாலயத்தின் மணி அடிக்கும் பொறுப்பில் இருந்தான். அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து நுழைவாயில் தெரியாது. தடுப்புகளின் இடைவெளியில் உள்ளே செல்பவர்களின் ஆடைகளும் , அவர்களின் கைகள் மட்டுமே தெரியும். நாட்கள் முழுக்க எத்தனை கைகளும் , மெழுகுவர்த்திகளும் உள்ளே செல்கின்றன என எண்ணிக் கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கையைக் கொண்டு அவனால் உட்செல்பவர்களின் பிரச்சனையின் வீரியத்தை அளவிட முடிந்திருந்தது. அவன் மனதுக்குத் தோன்றினால் அவர்களது பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென மணி அடிப்பது அவன் வழக்கம்.

தேவாலயத்தின் மணி ஒருமுறை தனது மேலிருந்த நீர்த் துளிகளை சிலிர்த்துக் கொண்டு ஒலித்தது. இப்பொழுது அந்த முடவன் மணி அடித்தது வெள்ளை உடை அணிந்த , ஒற்றை மெழுகுவர்த்தியை இறுகப் பற்றியிருந்தவளின் கைகளுக்காக. கொஞ்சம் இடைவெளி விட்டு ஒற்றை ரோஜாவை அதை விட இறுகப் பிடித்தபடி தொடர்ந்திருந்த கைகள் புதியதாகத் தெரிந்தது.

அந்த ரோஜாவுக்குச் சொந்தக்காரன் அந்தப் பெண்ணிடம் இருந்து நான்கு மேஜைகள் பின்னால் உட்கார்ந்து கொண்டான்.

உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மஞ்சள் வெளிச்சத்தில் மண்டியிட்டுக் கண்கள் மூடியபடி பிராத்தனையில் இருந்தாள் அவள். மிக மிக அழகாக முணுமுணுத்துக் கொண்டிருந்தன அவள் உதடுகள்.

அவளை நோக்கியபடி அவனது பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன் மெளனமாக.

Read the rest of this entry »

Tags: ,

இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும்

சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது

வாய் புகுந்து மீண்டால்

இன்னொரு தெரு

இன்னொரு வாசல்

தப்ப முடியாதென்றே தெரிகிறது …

உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது

மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது

இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி

தொலைந்து போகத் தோன்றுகிறது

பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்

மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது

மதில் மேல் பூனையாய் என் நிழல்

எந்தப் பக்கம் விழும் …

நிழலைத் துரத்திக் கொண்டு நானும்

என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்

ஓடிக் கொண்டேயிருக்கிறோம்

Read the rest of this entry »

7
Jun

ஊஞ்சல்

   Posted by: Rejovasan   in கதை நேரம்

ஒரு வினோதமான பந்தயத்தில் இருக்கிறேன் .. றோம்.

கல்லூரி இரண்டாம் வருடம் .. மார்ச் மாதமாக இருக்கலாம் .. பாலா வந்து சொன்னான் .. தமிழ் மன்றத்துல சிறுகதைப் போட்டி வச்சிருக்காங்க … தலைப்பு ஊஞ்சல்.

அதற்கு முன்பு வரை சிறுவர் மலர் படித்துக் கொண்டிருந்தவனிடம் சிறுகதை என்றால் ? அப்பொழுது தான் சுஜாதாவும் , தபூ சங்கரும் அறிமுகமாகி இருந்த நேரம்.

இருவரும் கதை எழுதுவது என முடிவு செய்தோம். எந்த பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படவில்லை. எழுதியும் தொலைத்தோம்.

இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. எந்த தைரியத்தில் எழுதத் துவங்கினேன் என்று. எவ்வளவு தேடியும் மூலப் பிரதி கிடைக்கவில்லை. முடிந்த அளவு நினைவில் இருப்பதை வைத்து அப்படியே மறுபிரதி செய்யலாம் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் அதற்கு நேரம் வந்திருக்கிறது …

போட்டியின் முடிவு தானே. கதையின் முடிவில் ….

ஊஞ்சல்

இந்தப் பனில எங்கடா போற?” அம்மாவின் கேள்விக்குப் ‘பேப்பர்’ என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு வாசலுக்கு ஓடினேன்.

ஈரம் காயாத படியில் உட்கார்ந்து துணி நனைந்ததைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படமால் சூடாகக் காபியை உள்ளே தள்ளிக் கொண்டே பேப்பர் படிப்பதைப் போன்ற சுகம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் இன்று என் மனம் இதை எல்லாம் ரசிக்கிற நிலையில் இல்லை .. கண்கள் பேப்பரில் இருந்தாலும் மனது முழுவதும் எதிர் வீட்டையே மேய்ந்து கொண்டிருந்தது.

முந்தா நாள் மாலை தான் அவர்கள் குடி வந்திருந்தார்கள்.

அழகான பெண்ணின் அப்பாவிற்கு எந்த அந்தரங்கமும் இருக்க முடியாது. அலுவலகத்தில் எத்தனை முறை மெமோ வாங்கினார் என்பதில் இருந்து , அவர் முண்டா பனியன் எத்தனை இடங்களில் கிழிந்திருக்கிறது என்பது வரை ஒரே நாள் இரவில் தெருவில் இருக்கும் அத்தனை ஆண்களின் நாட்குறிப்பேடுகளிலும் ரகசியமாய் குறிப்பெடுக்கப்பட்டிருக்கும். அழகான பெண்ணின் அம்மாவிற்குத் தான் எத்தனை சலுகைகள் ! ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம் என்பதில் இருந்து , தள்ளுவண்டிக்காரன் கொசுறாகத் தரும் கொத்த மல்லி வரை … கொடுத்து வைத்தது யாரென்றால் அழகான பெண்ணின் தம்பி தான். அவனுக்கு அவுட் தரும் அம்பயர் அந்தத் தெருவில் நிச்சயம் இல்லை.

Read the rest of this entry »

Tags:

Page 1 of 1412345...10...Last »